வெள்ளி, 24 டிசம்பர், 2010

அந்த அரிமா நோக்கில்...!

அந்த அரிமா நோக்கில்...!

நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.

அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!

ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.

அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.

அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,

சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!

மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!

சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.

ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?

ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!

பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!

மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!

பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!

பெரியார் மறைய மாட்டார்!

பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?

திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,

விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்

பாதையில் பயணிக்கிறோம் என்பதை

நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து

தந்தையின் தன்னிகரற்ற

தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.

நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,

இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!

அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!

எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

- http://www.viduthalai.periyar.org.in/20101224/news03.html