செவ்வாய், 30 நவம்பர், 2010

நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வராமல் நாடாளுமன்றத்தை முடக்குவதுதான் ஜனநாயகமா - வீரமா?

நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வராமல்
நாடாளுமன்றத்தை முடக்குவதுதான் ஜனநாயகமா - வீரமா?
அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுபோல் நடப்பதுதான் பத்திரிகை தர்மமா?
தமிழர் தலைவர் அறிக்கை

ஊழல் பிரச்சினையானாலும், வேறு எந்தப் பிரச்சினையானாலும் நாடாளு மன்றத்தில் விவாதிக்க முன்வரவேண்டும் - அதற்காகத்தான் மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனை மறந்துவிட்டு, அவையை நடக்கவிடாமல் செய்வது எந்த வகை ஜனநாயகம் என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
நம் நாட்டில் ஜனநாயகம் அசல் கேலிக் கூத்தாக்கப்படுகிறது - இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகளேயாகும்.
கூடி விவாதிக்க வேண்டிய மன்றம் கூச்சல், குழப்பம் அன்றாடம் அரங்கேற்றப் பட்டு, ஒத்தி வைப்பு என்பது ஒரு தொடர் கதை மன்றமாகி, வாக்களித்த மக்களை ஒன்றும் தெரியாத மண்ணாங்கட்டிகள் என்றும் கருதிக் கொண்டு சந்தைக் களேபரம் நடைபெறுகிறது!
விவாதிக்க வரத் தயங்குவது ஏன்?
பொது ஒழுக்கம் விடைபெற்றுச் செல்வதைக் கண்டு நாகரிகம் புரிந்தோர் எள்ளி நகையாடும் வேதனை அன்றாட அவலமாகி வருகிறது!
ஊழல், ஊழலோ ஊழல் என்று நடக்காத ஒன்றை, வெறும் கனவுக் கணக்குக் காட்டியே பாமரர்கள்முதல் படித்தவர்கள் வரை பலரையும் திகைக்க வைக்கும் தீராதி தீர, சூராதி சூர எதிர்க்கட்சிகள் நியாயமாக செய்யவேண்டியது என்ன?
ஆளுங்கட்சி கூட்டணி எந்த விவகாரத்தைப்பற்றியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்பட அவையில் வெளிப்படையாக விவாதிக்கத் தயார் என்று கூறி, அவைக்கு வாருங்கள்; புறக்கணிக்காதீர்கள், அவையை நடத்தி அதில் ஆரோக்கியம் மிக்க விவாதங்களை நடத்துவோம் வாரீர், எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் எழுப்புங்கள், பதில் அளிக்கிறோம் என்று நான்கு முறை எதிர்க்கட்சிகளிடம் அவை முன்னவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திரும்பத் திரும்ப வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லையே! தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றே சாதிக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்கும் தந்திரம்
ஏற்கெனவே ஜே.பி.சி. (J.P.C.) என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை மூன்று, நான்கு முறை நடந்தும் காதொடிந்த ஊசியளவும் பலன் இல்லாதபோது, இப்படி பிடிவாதமாக ஒரு கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா?
5 ஆண்டுகாலத்திற்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு (UPA) நாட்டு மக்கள் வாக்களித்து அனுப்பியுள்ளதில், ஒரு ஆண்டுதான் கழிந்திருக்கிறது; எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்குள் குறுக்கு வழியில் இந்த அரசை பதவி விலகச் செய்ய - இந்தக் கூட்டுக் குழு தங்களுக்கு ஒரு கருவி, கரணாதியாகப் பயன்படாதா என்பதுதான் அந்த நப்பாசைகளால் நாளும் இப்படி கூச்சல், குழப்பம்!
கடந்த 2009 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்து பார்த்தனரே! அதையும் மீறி - அதனைப் பொருட்படுத்தாது மக்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித் தனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி வெற்றி பெற்றதே! அமைச்சர் திரு. பன்சால் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், பா.ஜ.க.வை இயக்குவது எப்போதும் ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்புதான் என்பது உலகறிந்த உண்மை.
இப்போதும் அதுதான் பா.ஜ.க.வுக்கு சாவி கொடுத்து இப்படி நாடாளுமன்றத்தை 13 நாள்களாக முடக்கும்படி செய்கிறது!
இடதுசாரிகளாவது சிந்திக்கவேண்டாமா?
இடதுசாரி கட்சிகளாவது தங்களது ஜனநாயகக் கடமைகளை நாடாளுமன்ற விவாதத்தில், ஆணித் தரமாக உண்மைகளைக் கூறுவோம் என்று சொல்லி, அவை நடத்த ஒத்துழைப்புத் தர முன்வந்திருக்க வேண்டும். இரண்டு மாநிலங்களில் ஆளுங்கட்சி கூட்டணியாக உள்ள அவர்களது ஆட்சிக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன பேசியிருப்பார்கள்?
மேற்குவங்கம், கேரளா இங்கேயெல்லாம் அவையை இப்படி முடக்க எதிர்க்கட்சிகள் முயன்றால், வேடிக்கை பார்த்து இவ்வளவு பொறுமையுடன் நடந்துகொள்வர்களா?
ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி போன்ற பூணூல் ஏடுகள், மடியில் கனம், வழியில் பயம் என்று உண்மையைத் தலைகீழாக்கி, ஒரு குலத்துக்கொரு நீதி பேசி தலையங்கங்கள் தீட்டுகின்றன!
விவாதிக்கத் தயார் என்பவர்களுக்கு பயமாம்! எப்படி இருக்கிறது நியாயம்!
அங்கே வராமல் ஓடி ஓடி கூச்சல் போட்டு, ஒத்தி வைத்து மக்கள் வரிப்பணத்தைக் கரியாக்கும் கட்சிகள் வீராதி வீரர்களாம்!
மகாபாரத பத்தினித் தர்மமும் -
இன்றைய பத்திரிகா தர்மமும்!
இது எப்படி இருக்கிறது தெரியுமா? அய்வருக்கும் தேவியாம். அழியாத பத்தினியாம் துரவுபதி எனும் மகாபாரத பத்தினித் தர்மத்தின் அண்ணன் இந்த பத்திரிகா தர்மம் என்பதை சராசரி அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ளுவர்.
அந்தோ ஜனநாயகமே! உன் கதி இப்படியா?
வெட்கம்! வேதனை!!


கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

- http://www.viduthalai.periyar.org.in/20101130/news02.html

திங்கள், 29 நவம்பர், 2010

ஞானசூரியன் தொடர்-10

பொருள்: குலத் தொழிலை மீறி நடக்கிற வைசியன் இறந்தபின், மலத்துவாரத்தில் கண்களை உடையதும் மலத்தையே புசிக்கும் இயற்கையுடையுதுமான, மைத்திராக்ஷ ஜோதிகன் என்கிற பிசாசாகவும், இம் மாதிரியே சூத்திரன் வெள்ளைப் பேனைத் தின்கிற கைலாசகன் என்கிற பிசாசாகவும் பிறக்கின்றனர். இதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், இன்னும் பாப்பனருக்கே அடிமையாக இருக்கவிரும்பினால், அவர்களையே வணங்கிக் கேட்டும், அடிமைத் தனத்தைத் தள்ளிச் சுதந்திரமாக இருக்க விரும்பினால், ஸ்மிருதிகளைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.
1சனாதன தரும முறையாக வருணங்கள் நான்கே உள்ளன. இதற்கு மனுவின் வசனம் வருமாறு:
பிராஹ்மண; க்ஷத்திரியே வைஸ்த;
த்ரேயோவர் ணாத்விஜாதய
சதுர்த்த ஏகஜாதிஸ்து சூத்ரோ
நாஸ்திது பஞ்சம (மனு)
பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள். 2நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி (இவனுக்கு உபநயனமில்லாததால், துவிஜாதியாக மாட்டான்). அய்ந்தாவது ஜாதி கிடையாது. ஆனால், இக்காலத்தில் காணப்படுகிற அளவற்ற ஜாதி வேற்றுமைகள் எங்ஙனம் உண்டாயின என்றால், எட்டுப் பார்ப்பனர்களும், ஒன்பது அடுக்களை என்று வங்க தேசத்தில் ஒரு பழமொழி வழங்குவதுண்டு. இதைப்போல் ஒழுக்கங்களையுடைய வகுப்பினர்கள் அனைவரும் ஸ்மிருத முறைப்படி சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர்களேயாவர்.
1. சனாதன தருமம், வைதிகம், மனுதர்மம், வருணாச்சிரம தருமம் ஆகிய சைவம், வைணவம், தருமம் என்பனவெல்லாம் பிராமண மதமென்றே கொள்ள வேண்டுவதன்றிப் பெயர் மாற்றத்தால் மயங்கவேண்டாம்.
2.பிறப்பினால் மனிதனாகவும், வைதிக ஸம்காரத்தாலும், ஒழுக்கங்களினாலும் ஜாதிகள் உண்டாவதால், எம்மனிதனுக்கும் சமஸ்காரஞ் செய்து ஒழுக்கங்களைப் பழக்கினால் ஜாதியுண்டாமென்றது கருத்தாகவும், பிற்காலத்தில் பொறாமையால் எழுதிய சுவடிகளில் சம்ஸ்காரம் செய்யாதே என்று எழுதியும், நல்லொழுக்கத்தில் பழகினால் தண்டித்தும் வந்த மதமே பிராமண மதமென்றறிய வேண்டும். நிற்க, அய்ந்தாவது ஜாதி கிடையாது என்று இதில் கூறவும் 180 ஜாதி என்கிறது எசுர்வேதம்.
ஆதலால், எவ்வளவு உயர்ந்த ஜாதியென்று தன்னை மதித்துக் கொண்டாலும் வேதவிதிப்படி உபநயனமில்லாத வர்கள் யாவரும், இந்த நான்காவது ஜாதியிலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள். புலையர், சான்றார், செட்டியார், பிள்ளை எனத் தங்களை உயர்வுப்படுத்திக் கூறிக்கொண்டு, ஒருவரோ டொருவர் கலக்காமல் நூல் முறையும் தெரியாமல், நம்மவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, வருவது பார்ப்பனருக்கு நன்மையும் நம்மவருக்குள் தீமையும்தான் பயக்கம். தவிரவும் அய்ரோப்பியர், அமெரிக்கர், ஜப்பானியர், அராபியர், சைனாக்காரர் முதலிய பலதிறப்பட்ட மனிதர்களும் பார்ப்பனர் பார்வைக்குச் சூத்திரன் என்ற வார்த்தைக்கு இடங்கொடுப்ப தில்லை. பார்ப்பனர் தங்களுக்கு இடையூறு நேராவண்ணம், ஒரு ஜாதியாருக்குள்ளேயே இவ்வளவு அதிகமான வேற்றுமையை உண்டாக்கி, அதை அழியாமல் நிலைநிறுத்திக் கொண்டு வருவதால் அவர்களுக்கு மிகுந்த நன்மையுண்டு. ஆனால், இந்த வேற்றுமைகளைப்பற்றி அவர்கள் ஒன்றும் கூறமாட்டார்கள். இப்போது பலவிடங்களிலும் நாடார்களுக்கும், நாயக்கமார்களுக்கும் யுத்தம். புலையர்களுக்கும் ஏனைய வகுப்பினருக்கும் சண்டை. மலையாளத்தில் வைக்கத்தில் நடந்த சத்தியாகிரகம் மற்றும் பலவிடங்களிலும் மண்டை உடைபடுதல் ஆகிய இவைகளெல்லாம் இவ்வேற்றுமையின் பயனென்று நம்மவர்கள் நன்கு யூகித்து உணர வேண்டும். இதனால் நம்மை வஞ்சிக்கிற பார்ப்பனர்கள் ஜெயமடைகிறார் களென்றும், நாம் தோல்வியடைகிறோமென்றும் நன்கு விளங்குகிறன்றோ? வேத முறைப்படி சம்ஸ்காரமில்லாத வர்களைச் சூத்திரர்கள் என்று பார்ப்பனர்கள் கூறும் சொற்படியே நாமும் கூறுகிறோமேயல்லாது, தாழ்மைப்படுத்திக் கூறுவது எமது கருத்தன்று.
சம்ஸ்காரமில்லாதவர்களும் சூத்திரர்களே என்று பார்ப்பனரும் அவர்களின் சமய நூற்களும் கூறினும், பார்ப்பன சமயத்தைப் பின்பற்றி யொழுகுவோர் யாரோ அவர்களைத்தான் இதனால் ஏற்படும் தீமைகள் சாரும். 1அதினின்றும் ஒழிந்தவுடன், ஜாதிச்சங்கிலி அறுபட்டுப் போவதால், அத்தகைய தன் மதிப்புள்ள ஒரு மனிதனைப் பார்த்து, நீ சூத்திரனாகப் பிறந்தமையால் எங்களுக்கு அடிமை; வீட்டுக்கு வந்து எனது கட்டளைப்படி நடக்கவேண்டும் என்று ஒரு பார்ப்பனன் கூறத்துணிவானோ? எவனேனும் இறுமாந்து மதிப்பைக் கெடுக்கக்கூடிய வார்த்தை யாதேனும் கூறுவானாயின், அக்கணமே பிறரால் நையப் புடைக்கப்படுவதோடு,
1. கிறிஸ்துக்கள், முகம்மதியர்கள், புத்தர்கள் முதலியோர்.
2கிரிமினல் சட்டப்படி தண்டனையும் அடைவானென்பது திண்ணம். ஆனால், பார்ப்பனரல்லாத ஓர் இந்து முன்சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியதுதானே, அதனாலன்றோ வைக்கத்தில் பொதுவழியில் நடக்க உரிமை வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொண்டும் பயன்படாது, ஓராண்டு காலமாய்க் கடுந்தவம் புரிகின்ற பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்கள் கிறிஸ்துவையோ முகம்மது நபியையோ சரணமடைந்தால், அடுத்த நிமிஷத்திலேயே இரத்தம் ஒழுகுகின்ற மாமிசத்தைக் கையில் தாங்கிக் கொண்டு எந்தப் பொதுவழியிலும் தடையின்றிச் செல்லும் உரிமையுடையவர் களாகின்றார்கள். இது ஜாதிச்சங்கிலி அறுந்து போனதனா லென்றே உணரவேண்டும். இந்துச் சமயத்தைத் தங்கள் சமயமாக ஒப்புக்கொள்ளும் பார்ப்பனரல்லாதாரைப் பார்ப்பனர்கள் தஸ்யு, தாஸன் 3விருஷலன் என்றும் மற்றும் இழிவாகக் கூறுவதிலும் இதினின்றும் விலகியவர்களைத் துரை (அரசன்), சாயபு (பிரபு) என்றும் அழைத்து உபசரிப்பதிலும் என்ன ஆச்சரியமிருக்கிறது?
இனி, ஒவ்வொரு வருணங்களையும் அவர்களின் ஒழுக்கங்களையும் பற்றிக் கூறுவோம். பார்ப்பனன் யாவன்? என்னும் வினாவிற்குப் பார்ப்பனியின் வயிற்றிற் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி முதலிய தரும சாஸ்திரமுறைப்படி விடை இப்படியே நடைபெறுவதையும் பார்க்கிறோம் அல்லவா? இஃதன்றி வேறு வகையாகவும் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:-
சமோதமஸ்தப: சௌசம்
க்ஷாந் திராஜவமேவச
ஜ்ஞானம் விஞ்ஞானம் மாஸ்திக்யம்
ப்ராஹ்மம் கர்ம, ஸ்வபாவஜம்
(கீதை - அத்தியாயம் 18)
பொருள்: ஞானேந்திரியம், கருமேந்திரியங்களை அடக்குதல், சுத்தி, பொறுமை, நல்லொழுக்கம், சாஸ்திரஞானம், அனுபவஞானம் இவை பிராமணனது இயற்கைக் குணங்களாம். முன்சொன்ன மனுஸ்மிருதிக்கும் இதற்கும் இருக்கிற வேற்றுமை, வீட்டுச் சுரைக்காய்க்கும், ஏட்டுச் சுரைக்காய்க்கும் உள்ள வேற்றுமை போன்றதே.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101129/news10.html

கலைவாணர்

கலைவாணர்

நகைச்சுவை மன்னர் கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1908).
அவரின் பெருமைக்குத் தந்தை பெரியார் சூட்டிய புகழ் மாலை ஒன்று போதுமே! இனி என்.எஸ். கிருஷ் ணன் செத்தாலும் சரி, அவர் பணம், காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப்பற்றி சரித்திரம் எழு தப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித் திரமே தீண்டப்படாதது ஆகி விடும்!
(குடிஅரசு, 11.11.1944).
தந்தை பெரியார் கூறிய படியே 50 வயது நிறைவு ஆவதற்குள் கலைவாணர் மறைந்தார், வாரி வாரி வழங்கிய அந்த வள்ளல் அன்னக் காவடியாகவே மறைந்தார்; எனினும், தந்தை பெரியார் அவர்கள் கணித்தபடியே சரித்திரத்தின் உச்சத்தில் கதிரொளியாக நம்மிடையே மின்னிக் கொண்டிருக்கிறார்.
உடலை ஆட்டி, வயிற்றைக் குலுக்கி, கீழே வழுக்கி விழுந்து சிரிப்பை செயற்கையாக மக்கள் மத்தியில் உண்டாக்கும் கலை ஞர் அல்ல கலைவாணர்.
சொற்கள், அதில் சொருகி நிற்கும் கற்கண்டுக் கருத்துகள் - அவற்றைச் சொல்லும் முறையாலே மக்கள் மத்தியிலே வெடிச்சிரிப்பைக் கிளப்பும் பேராற்றலுக்குச் சொந்தக்காரரே கலைவாணர்.
கருத்துகள் என்றால் பழைமையைக் கட்டிக்கொண்டு அழும் புராணப் புழுதியின் காளான்கள் அல்ல; காலா காலமாகக் கட்டிக்கொண்டு அழும் மடமையின் நடு முதுகெலும்பை முறித்த, புதிய சிந்தனைக்கான வெளிச்சம்.
என் ஆசான் - பச்சை அட்டைக் குடிஅரசு என்று கலைவாணர் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டால், அவர் வாய் உதிர்க்கும் கருத் துகள் உருப்படியாக மக்களின் சிந்தனைகளில் புரட்சி வித்துக் களைத் தூவுவதைப் புரிந்து கொள்ளலாம்.
பக்தி என்ற பெயரால், திருவிழா என்ற பெயரால் கோயிலில் உள்ள குழவிக் கற்களுக்குப் பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம், நெய் அபிஷேகம் என்று உணவுப் பொருள்களைப் பாழாக்கு கிறார்களே,
திருவண்ணாமலைத் தீபம் என்ற பெயரால் 3500 கிலோ நெய்யை நெருப்புக்குத் தீனி யாகப் போட்டு நாசப்படுத்து கிறார்களே - இது எவ்வளவுப் பெரிய கொடுமை - மானுட விரோத செயல்!
போதிய ஊட்டச் சத்து இல்லாமையால் 30 விழுக்காடு குழந்தைகள் எடைக் குறை வாகப் பிறக்கிறார்கள்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காடும், பெண்களில் 52 விழுக்காடும் இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகையால் பீடிக்கப்படுகின் றனர். மேலும் 5 வயதுக்குட்பட்ட 57 விழுக்காடு குழந்தைகள் வைட்டமின் ஏ குறைவால் பாதிக்கப்படுகின்றனர் என் றெல்லாம் ஒரு பக்கத்தில் புள்ளி விவரங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றன.
மங்கையர்க்கரசி எனும் படத்தில் (உவமைக் கவிஞர் சுரதா முதன்முதலாக உரை யாடல் தீட்டியது) ஒரு பாடல் வரி மூலம் கலைவாணர் கூறுகிறார்:
பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்;
பால் இல்லை என்று சிசு பதறுவதைப் பார்!
நையாண்டி மட்டுமல்ல; நறுக்கென்று ஒரு குட்டுக் குட்டி, பரிதாப உணர்வையும் தூண்டி, பகுத்தறிவு நரம்புகளை மீட்டு வதையும் கவனிக்கவேண்டும்.
இவருக்குப் பெயர்தான் கலைவாணர்!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101129/news01.html

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஞானசூரியன்- தொடர்-9

ஞானசூரியன் - தொடர்-9

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010

விப்ரத்வேனது சூத்ரஸ்ய
ஜீவவதோஷ்- சதோதம
பொருள்: விப்பிரன் (பார்ப்பனன்) என்று சொல்லிக் கொண்டு உயிர் வாழுகின்ற சூத்திரன் எண்ணூறு (800) நிஷ்கங்களை (ஒருவகைப் பொன் நாணயம்) அபராதமாகக் செலுத்தக் கடவன் (யாக்ஞவல்கிய ஸ்மிருதியில்).
இவ்விதமாக வேலை செய்து கூலியைக்கூட அடையமுடியாதபடி கஷ்டப்பட்டுக் கொண்டு வநத சூத்திரர்கள் எங்ஙனம் உயர்ந்து வாழமுடியும்? இவர்கள் செய்கிற வேலையினால் பார்ப்பனர்கள் ஜீவனம் செய்து வந்ததாக மேற்கண்ட பிரமாண வாக்கியங்களாலும் விளங்குவதால், இவர்களின் முன்னேற்றத்தைப் பார்ப்பனர்கள் விரும்புவார்களா? மற்றும்,
ந சூத்ராய மதிம் தத்யாத்
நொச்சிரஷ்டம் நஹவிஷ்க்ருதம்
ந சாஸ்யோபதிசேத் தர்மம்
ந சாஸ்ய வ்ரதமாதிசேத்
பொருள்: சூத்திரனுக்குக் கல்வியைக் கற்பிக்கவும் யாக சேஷமாகிய அவிசை (எஞ்சிய உணவுப் பொருளை)க் கொடுக்கவும் கூடாது. தருமோபதேசத்தையும் பண்ணலாகாது; நோன்பு நோற்கும் முறையையும் சொல்லலாகாது.
இதைமீறிச் சூத்திரனுக்குப் பவுரோஹித்யம் (சிரார்த்தம் முதலியன நடத்துவது) செய்துவந்த பார்ப்பனர்களை மலையாளத்திலும், தமிழ் நாட்டிலுங் கூடச் சிலவிடத்துப் பந்தியில், போசனத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இத்தகைய பார்ப்பனர்களுக்கு மலையாளத்தில இளையது எனப்பெயர். இதைப்போன்ற உதாரணங்கள் பலவுள. அவற்றுள் சிலவற்றைச் ஜாதி தருமத்தைக் கூறுமிடத்து விரிவாகக் கூறுவோம்.
இக்காரணத்தால், கருமத்தினால் பிராமணனாவதற்கு இந்து மதம் இடந்தரமாட்டாது. இக்காலத்துப் பிரிட்டிஷ் அரசாட்சியின் கருணையால் கல்விக்கு இடம் ஏற்பட்ட போதிலும், சங்கரலிங்கம் பிள்ளை, கிருஷ்ணசாமி முதலியார், கோவிந்தராஜுலு நாயுடு, சுப்பையா நாடார் முதலிய பட்டப் பெயர்கள் அணிந்துகொண்டிருக்கிற வகுப்பினர் எவ்வளவு வேதாந்தம் படித்த போதிலும் இந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிற வரையில் இவர்கள் இந்துக்களேயாகையால், சமஸ்காரத்திற்கு அதிகாரம் இல்லை.சமஸ்காரு மில்லாததால், பிராமணத்தன்மையை அடையவும் மாட்டார்கள். யாவரும் சூத்திரர்களே (பிராமணனுக்கு அடிமையே). இதற்கும் மேற்கோள் காட்டுவோம்.
அனார்யமார்ய கர்மாணம்
ஆர்யம் சானார்யகர்மிணம்;
ஸம்ப்ரதார்யாப்ரவீத் தாதா,
நஸமௌ நாஸமாவிதி (மனுஸ்மிருதி)
பொருள்: 1ஆரியன் (பார்ப்பனன்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப்பேவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனு மாகமாட்டான். தொழிலினால் இவ்விருவர்களுக்கும் சமத்துவம் தோன்றினும், ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானாக முடியாதென்பது கருத்து.
ஆனால், ஜாதி வேற்றுமைகள், தொழில் வேற்றுமையால் தான் ஏற்பட்டன என்று சொல்லுகிறவர்களும் தாங்கள் பரம்பரையாகவே அடிமைகளாயிருப்பினும் சாணியில் புழுத்த புழுக்களில் சில தங்கள் இனத்தில் பலவற்றைத் தின்று தாங்கள் பலசாலிகள் என்று நடித்துக் கொண்டிருப்பது போல், இவர்களும் தங்களை உயர்ந்த ஜாதியாகச் சொல்லிக்கொண்டு பலரைத் தங்களினின்றும் தாழ்த்தி வந்ததோடு, மனிதப் பிறவியானது எத்தகைய பெருமை வாய்ந்த தென்பதைக் குறித்துக் தாங்களும் ஆராயாமல் பிறரையும் ஆராயவொட்டாமல் தடுத்தும் 1. ஆரியன் என்ற சொல் முற்காலத்தில் ஆரியமொழி பேசுவோரைக் குறித்திருந்தும், பிறகு ஒரு நாட்டாரைக் குறித்தும், பிற்காலத்தில் ஒரு ஜாதியாருக்கே உரியதாகவும் வழங்கி வருகின்றன. ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் எனத் தமிழ்மறை மிழற்றும். வருகிறார்கள். இதனால் இதுகாறும் யாதொரு நற்பயனும் அடையவில்லை. இனிமேலும் அடையவும் முடியாது. அன்றியும் நான்கு வேதங்களையும் படித்தவ னாயும் சிறந்த நல்லொழுக்க முடையவனாகவும் இருப்பினும், சூத்திரனே. எதிர்மறையாகப் பார்ப்பனன் எழுத்துவாசனை தெரியாத வனாயும், கொலை, களவு, கட்குடி, விபச்சாரம், பொய் பேசுதல் என்னும் இவை களையே தொழிலாக உடையவனாயிருப்பினும், அன்னான் பார்ப்பான் என்கிற ஒரே காரணத்தை முன்னிட்டுப் பந்தியில் உண்ணவும், தானம் வாங்கவும் சுவாமி என்று பிறரால் அழைக்கப்படவும் உரிமையுள்ளவனாக இருக்கின்றான். இப்படியே இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறதன்றோ? இக்காலத்தில் பிராமணனைப்போல் வேடம் போட்டுக் கொண்டு தவம், சந்நியாசம், பலருக்கு உபதேசம் புரிதல் இவை முதலிய தொழில்களை மேற்கொண்டு நடிப்பவரும் சிலர் உளர். இவர் அடையும் பயன் யாது,? இங்குமங்குமில்லாமல் அந்தரத்தி லிருப்பதேயாம். மனுவின் கொள்கைக்கு விரோதமாக ஆரிய சமாஜத்தினரால் சூத்திரர்கள் அடைந்துவரும் நன்மையைப் புராணங்களில் சொல்லப்படும் திரிசங்குவின் சுவர்க்கத் திற்கு ஒப்பிடலாம்.
தனக்கு ஏற்படுத்திய தொழிலை மீறி நடக்கிற சூத்திரனை அரசனானவன் ஆடு, மாடுகளைப்போல் நினைத்துச் 1சித்திரவதை செய்யவேண்டும். தங்கள் குலத்தொழிலை மீறுகிற வைசிய சூத்திரர்கள் இறந்தபின் மறுமையில் அடையவேண்டிய பயனை மனு கூறுவதையும் கேளுங்கள்.
2மைத்ராக்ஷ ஜ்யோதிக: ப்ரேதோ
வைஸ்யோ பவதிபூய புக்
கைலாச கஸ்ச யவதி சூத்ரோ
தர்மாத்ஸவ காச்யுத 1.
சரீரத்திலுள்ள அவயவங்களைச் சிறிது சிறிதாக அரிந்தெடுத்தும், உறுப்புகளில் ஆங்காங்கு ஆணியடித்தோ, மற்றெவ்விதமாகவோ பல நாள்கள் துன்புறுத்தி, முடிவில் உயிர் போக்குவதைச் சித்திரவதை என்பார்கள். ரோமன் காலத்தில் இக்கொள்கை போல நடந்ததால்தான் இயேசுநாதர் சித்திரவதை செய்யப்பட்டார்.
2. காசி முதலிய வடநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் தங்களைப் பிராமண, க்ஷத்திரியன், வைசியன் என்று கூறிக்கொண்டு துறவு பெற்றுக்கொண்டு வரும் பலரையும் இக்காலத்தில் காணலாம். இவர்கள் அறிவிருந்தவாறென்னே! தமிழ் நாட்டிற் பிறந்தும், தமிழ் மக்களால் வளர்க்கப்பட்டும், தமிழன் நாகரிகத்தினை உணராமல் ஆரியர்களுக்கு அடிமையென நினைத்துக் கொண்டு ஏனையோரை வெறுக்கின்றனர். இவர்களுக்கு நல்லறியுண்டாவதாக.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101128/news12.html

ஞானசூரியன்-8

ஞானசூரியன்

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928, 20 ஆம் பதிப்பு : 2010
1.வேத முறையாகப் பதினாறு சமஸ்கார கருமங் களைச் செய்தவனே ஞானமுணர்த்துங் குருமூலமாக வேதாந்தம் கேட்க வேண்டுமென்பது விதி. இவ்விதி பிராமணரல்லாதாருக்குக் கிடையாது.
2. வைதிக தாந்திரிகச் சைவமென்ற பெயரிடுவதற்கு முன்னுள்ள தமிழ்நாட்டு முதியோர்களால் அனுஷ்டித்து வந்த சித்தர் கொள்கையையும் புத்தமதக் கொள்கையையும் ஒருவாறு ஒத்திருக்கும். அப்படியே; சமணக் கொள்கையும் என்றறிக
என்பது சொல்லாமலே விளங்கும். இன்னும் இந்நூல்களின் உட்கருத்துகளையும் ஆராய்வோம்.
பிரம்மதேவனுடைய ஒவ்வொரு அங்கத்தினின்றும் பிராமணன் முதலிய ஜாதிகள் உண்டாயின. அல்லது தயானந்த சரஸ்வதியின் கொள்கைப்படி இவ்வங் கங்களோடு, (முகம், தோள் முதலிய பாகங்களை மற்றோரிடத்தில் கூறுகிறோம். இப்போது இந்த மதக் கொள்கைப்படிக்கு ஏற்பட்டிருப்பது ஜாதித் தொழிலினாலா? பிறப்பினாலா? என்பதைக் குறித்து ஆராய்வதே கடமை. இங்ஙனம் ஆராய்ச்சி செய்யப் புகுங்கால், நினைவிற்கு வருகிற பிரமாண வாக்கியங்களாவன:-
சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம், குணகர்மவிபாகச. (பகவத் கீதை)
நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப் பட்டவைகள்; அதுவும் குணங்களினாலும், கருமங்களி னாலுமே வேறுபாடன்றி மற்றைய வேறுபாடு கிடையாது.
ஜன்மனா ஜாயதே சூத்ரா;
கர்மணா ஜாயதே த்விஜ (சங்கர விஜயம்)
பிறக்கும் போது எல்லோரும் சூத்திரர்களாகவும், கர்மங்களாகிய கர்ப்பாதானம், உபநயனம் முதலியவை களால் மறுபிறப்பினனாகவும் (விப்ரன்) ஆகிறான்.
இக்கருத்தின்படி, யாவனாயினும் நல்லொழுக்கத்துடன் இருப்பானேல், பிராமணனாகலாமென்றாய் விட்டது. பறையனானாலும், யாகாதி கர்மங்களை அனுஷ்டித்தால் பிராமணன்தானே? பார்ப்பனியின் வயிற்றில் பிறந்தவர் களாயினும், இழிதொழிலுடையவர் புலையருமாவார்.
ஆனால், இத்தகைய பிரமாண வாக்கியங்கள் (சிற்சில இடங்களில் காணுவன) நம்மவர்களை ஏமாற்றும் படிக்குள்ள அநேக தந்திரங்களுள் இது ஒருவகையேயாகும். இவ்வுண்மையானது இத்தகைய (சூத்திரனைப் பிராமண னாக்கத்தக்க) கருமங்கள் யாவை? என வினவி, விடை தெரிந்து கொள்ளும்போது வெளியாகும். அதாவது-
கர்ப்பாதானம் முதல் அந்தியேஷ்டி வரையிலும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள்; வேதம் ஓதுதல், சாகை கோத்திரம், சூத்திரம், ப்றவரான்ஹம், நித்திய கருமங்கள் இவைகள்தாம் பிராமணத் தன்மையை உண்டுபண்ணு வதற்கு அடிப்படையாயிருக்கின்றன.
அஷ்டவர்ஷம், ப்ராஹ்மணமுபனயீத, தமத்யாபயீத எட்டாவது ஆண்டில் பிராமணனுக்கு உபநயனம் செய்து கல்வி கற்பிக்கவேண்டும் எனத் தொடங்கிய இக்கருமங்களை விதிக்கின்ற வாக்கியங்களினால் ஜாதிப் பிராமணனுக்கும், ஜாதிப் பிராமணத்திக்கும் பிறந்த பிள்ளைதான் அதிகாரியென்பது வெளிப்படையாதலால், முன்சொன்ன சாதுர் வர்ணியம் முதலிய வாக்கியங் களும், இதைப்போல் காணப்படும் வேறு சில வாக்கியங் களும், மயக்கத் தகுந்த வாக்கியங்களே என்பது புலப்படுகிறது மற்றும், ஒவ்வொரு ஜாதியார்க்கும் தொழில்கள் இன்னின்னவை என்று விதித்துக் கீதையில் கூறுவதைக் கேளுங்கள்:
ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண
பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய
பரதர்மே நிதனம் பயாவஹ
(பகவத்கீதை, அத்தியாயம் 3 - பாட்டு 35)
பொருள்: ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானுடைய தருமத்தை எவ்வளவு ஒழுக்கமாக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. ஆதலால், ஒவ்வொரு ஜாதியானும் தத்தம் தொழிலை இயன்றவாறு செய்து முடிப்பதே சிறந்தது. தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வள வாகக் குற்றமில்லை. பிறன் தொழில் பயத்தை உண்டு பண்ணக்கூடியது. ஆதலால், அதைச் செய்யலாகாது.
இத்தகைய வாக்கியங்களினால் நம்மவர்கள் பார்ப்பனருக்கு விதித்துள்ள தொழிலைச் செய்யக் கூடாதென்பதும், மீறிச் செய்பவனைக் கொலை செய்து விடுவோம் என்பதும் பயத்தை உண்டு பண்ணக்கூடியது என்ற கீதா வாக்கியங்களாலும், இதைப்போன்ற வேறு பல வாக்கியங்களாலும் இதுவரையில் நடந்து வந்ததும், இப்போது நடக்கிறதுமான ஒழுக்க முறையாலும் வெளிப்படுகிறது. இது நிற்க,
மறுமைக்குரிய துறையில் முக்கியமான துறவிக்கு உரிமையுடையவன் யாவன்? என்று கீழ்க்காணும் வேதவாக்கியத்தையும், மனுவின் வசனத்தையும் கவனித்து அறிந்துகொள்ளுங்கள்.
ப்ராஜாபத்யாம் மிஷ்டிம் நிருப்ய,
தஸ்யா ஸர்வவேதசம்
ஹுத்வா ப்ராஹ்மண:
ப்ரவ்ர ஜேத் (சதபதப்ராஹ்மணம்)

ப்ராஜாபத்யாம் நிருப்யேஷ்டிம்
ஸர்வவேத ஸதக்ஷிணம்;
ஆத்மன்யக்னீ, ஸமாரோப்ய ப்ராஹ்மண;
ப்ரவ்ர ஜேத்கர் ஹாத் (மனு)
பொருள்:- தன் பொருளனைத்தும் தானம் செய்து நிறைவேற்றத்தக்க பிராஜாபத்ய யாகத்தைச் செய்து அதன் முடிவான அந்தியேஷ்டி ஹோமத்தில் குடுமி, பூணூல் இவைகளை நெருப்பிலிட்டும், பிறகு ஒன்றுமில்லாதவனாக ப்ராஹ்மணன் வீட்டைவிட்டு வெளியேறக்கடவன்.
இதற்கு ப்ராஹ்மணன் நீங்கலாக ஏனையோர் அதிகாரிகளல்லரே? இதோடும் நிற்கவில்லை. தன் தொழிலைச் செய்யாமல் வேறு தொழில் செய்தால், அரசன் கவனித்து அடக்க வேண்டும் என்ற மனுவின் வசனம் வருமாறு:
வைஸ்ய சூத்ரௌ ப்ரயத்நேந: ஸ்வானிகர்மாணி காரயேத் தௌ ஹியுதௌ ஸ்வக்ர்மப்ய: ப்லாவயே தாமிதம் ஜகத் (மனு)
பொருள்: வைசியனும், சூத்திரனும் தத்தம் தொழிலைச் செய்கின்றார்களா என்பதை அரசன் கவனித்துச் சரிவர ஒழுகச் செய்யவேண்டும். அவர்கள் தத்தம் தொழிலைச் செய்யாவிட்டால், உலகம் வறுமையில் முழுகிப் போகுமன்றோ! (தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101127/news11.html

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஞானசூரியன்-7

ஞானசூரியன்

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010
சந்தோக்கியோப நிஷத்தில், பாலாகி என்ற பிராமணனுக் கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனை யோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப்பட்டார் கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.
மேலும், பகவான் புத்தரிடமிருந்தும் பல உயர்ந்த தத்துவங்கள் (அத்துவைதம்) உலகத்தில் வெளிப்பட்டன. இவரும் வருணமுறைப்படி அரச குடும்பத்தில் பிறந்தவ ரேயாவார். ஆயினும் இவருடைய கருத்துகள் பார்ப்பனர் களின் கருத்துக்கு ஒவ்வாதன. ஜாதியும் அந்தந்தச் ஜாதிக்கு என வகுக்கப் பெற்ற வெவ்வேறு ஒழுக்கங்களும் பொய்யுரைகள் எனவும், மனிதராகப் பிறந்த எல்லோரும் மோட்சம் அடைய அதிகாரிகள் என்றும், இதற்குக் கொலை முதலிய பாதகங்கள் கூடாதென்றும், பஞ்சமா பாதகர்களாகிய மேற்கூறிய சொர்க்கவாசல் திறவுகோல் காரர்களின் (key to the Heaven) தயவை எதிர்பார்க்க வேண்டியதில்லையென்றும் அவர் வெளிப்படுத்தியதனால், பார்ப்பனனின் சுயநலம் நாசமடைந்து, இவற்றோடு இவர்களது சொர்க்கமும் இந்திரனும், பிரார்த்தனைகளும் கண்டிக்கப்பட்டுப் போயின. அத்தருணத்தில் பார்ப்பனர் களுக்கு உண்டான வருத்தம் இத்தன்மையது என எங் ஙனம் எடுத்துக்கூறவியலும்? பவுத்தன் என்கிற சொல் காதில் விழுந்தாலே, இக்காலத்திய மக்களுக்குக்கூட வெறுப்பும், எடுத்துரைக்க முடியாத கோபமும் உண்டா கிறது! பவுத்தன் என்ற சொல்லிற்குப் புத்தனுடைய கொள்கையைப் பின்பற்றி ஒழுகுவோன் என்று மட்டுமே பொருளாயினும், பொதுமக்கள் வெறுப்பானது அக்காலந் தொடங்கிப் பார்ப்பனர்கள் செய்து வருகிற சூழ்ச்சியால் எழுந்த மதிமயக்கத்தினாலேயாம். கருணாமூர்த்தியான பகவான் புத்தர் மக்களின் தாழ்ந்த நிலையைக் கண்டு இரங்கிப் பேரின்ப நிலையைத் தன் அனுபவத்தாற் கண்டுவெளியிட்டார். அவ்வழியில் செல்ல விரும்பினவர் களையும் ஏமாற்றிப் பழைய நரகக் குழியிலே தள்ளி விட்டவர்கள் பார்ப்பனர்களே. தங்கள் விருப்பத்திற்குக் கீழ்ப்படியாத பலரையும் கொன்றும் கொலை செய்வித்தும் ஒடுக்கினார்கள். ஆயினும், பழைய பாட்டிக் கதைகளையே திருப்பித், திருப்பிப் பாடி வருவதைக் கேட்டு அமைதி அடையாத பொதுமக்களை மகிழ்வுறச் செய்யவும் தங்கள் சுயநலம் கெட்டுப் போகாமற் பாதுகாக்கவும் எண்ணிய போலிப் பார்ப்பனர்கள், புத்த தேவனுடைய தத்துவங்களை (பவுத்தர்களை அடிமைகளைப்போல் காட்டி) கிரகித்துக் கொண்டு, இவைகள் வேதத்தின் முடிவில் உள்ளவை; இவைதான் முக்தி வழியை விளக்கிக் காட்டுவன என்பன வாகிய பொய்யுரைகளைப் பகர்ந்து உபநிட தங்கள் என்ற பெயருடன் புதிதாக எழுதி வேதத்தில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், ஜாதி வருணாச்சிரமம், அதன் ஒழுக்கங்கள், யாகங்கள் இவை யாவும் மோட்ச வழி களன்று எனக் கூறினால், தங்களுடைய வருமானமும், பெருமையும் போய்விடுமே; இதற்கு என்ன செய்வதென்று யோசித்துக் கடைசியில் ஒரு சூழ்ச்சியும் செய்யலாயினர் அத்தந்திரமுறை பின்வருமாறு:
த்வே வித்யே வேதிதவ்யே அபார பராசேதி;
தத்ரா பார ரிக்வேதா, யஜுர் வேதோ: ஸிம்வேதோ,
தர்வ வேத :சிக்ஷா, கல்போ வியாகரணம், நிருக்தம்;
சந்தஸ் ஜ்யோதி ஷமிதி, அதபரா யயா ததக்ஷா
மதிகம்யதே (முண்டகோபநிஷத்து)
வித்தையாவன பரை, அபரையென இருவகைப்படும். இவற்றுள், மோட்ச மார்க்கத்தை உணர்த்துகிற ஆத்ம வித்தை பரவித்தையும், வேதாகமங்கள் அபரவித்தையு மாம்.
இப்பிரமாணத்தால் அச்சூழ்ச்சியை அறிந்துகொள்க.
இவ்விரு வித்தைகளுள் ஜாதி தருமமாதிகள் இல்லாத பரவித்தையைப் பின்பற்றுவோன் ஊரில் இருக்கலாகாது; உடனே காட்டிற்குச் சென்று விடவேண்டும். லவுகிகர்கள் (உலகப்பற்றுடையவர்கள்) அபரவித்தையைப் பின்பற்றி அதன்படி வைதிகத் தருமமும் அதன்படி ஜாதியையும் கட்டாயம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். இம்முறையி னால் பூதேவத் தன்மையும் பிராமணத் தன்மையும் கெடாமல் இருக்குமென்பதே கருத்து. ஆயினும், சூத்திரன் பரவித்தையைப் பின்பற்றி உயர்ந்த நிலையை அடையக் கூடாதென்ற கொள்கையோடு, அதற்கு வேண்டிய பொய்யுரைகளை வேதத்திலும் ஸ்மிருதியிலும் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். மேலும் அபரவித்தையை அனுச ரித்து அதன்படிக்குள்ள கருமங்களைச் செய்யாதவனுக்குப் பரவித்தையில் அதிகாரமில்லை. உபநயனமில்லாத வனுக்குக் கல்வி கற்கவும், நல்லோர்களின் சேர்க்கைக்கும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆகையால் வியாவ ஹாரிக வித்தைக்கு உரியவன் யாவனோ, அவனே பர மார்த்திக வித்தைக்கும் அதிகாரியாவான் என்றும், கூறியிருக்கின்றது. சங்கராச்சாரியார் அபர வித்தையை வியாவஹாரிக வித்தை என்று;, பரவித்தையைப் பரமார்த்திக வித்தை என்றும் கூறுகிறார். இக்காலம் வரையிலும் இந்துமதம் இதே நிலையில்தான் இருந்து வருகிறது. தமிழர்கள் இன்னும் இச்சூழ்ச்சியினை உணர்ந்து கொள்ளாதது விந்தையே.
இவ்விதமாகச் சுயநலத்தைக் காப்பாற்றும் பொருட்டு உண்மைக் கருத்துகளைப் பொய்ப் பெட்டகத்துள் மூடி வைத்திருப்பதால்தான் வேதாந்தக்கருத்துகள்1 அனுபவத் திற்கு வராமல் சொல்லளவிலேயே இருக்கின்றன. இந்த வேதாந்த வாக்கியங்களைப் புத்தமத நூல்களோடு சேர்ந்து ஆராய்ந்து பார்த்தால், குற்றமற்றதும், முன் னுக்குப்பின் முரணின்றிச் சகல சம்மதமுமான ஒரு தத்துவ சாஸ்திரத்திலிருந்து எடுத்து, அதன் பழைய உருவத்தைச் சிதைத்து அனுஷ்டிக்க முடியாதபடி செய்துள்ளார்கள் என்பது2 வெளிப்படும்.
அபர வித்தையில் இம்மைக்குரிய விஷயங்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றனவென்று முன்னரே கூறியுள்ளோம். அனைச் சற்று ஆராய்வோம். ஜாதிப் பிரிவினை, அந்தந்தச் ஜாதியாரின் ஒழுக்க முறை, அவரவர்களுக்குரிய சடங்குகள் முதலியன தரும சாஸ்திரங்களில் கூறப்பெற்றி ருக்கின்றன. வேதங்கள் எல்லாம் யாகத்திற்கு உபயோக முள்ள விஷயங்களையே அதிகமாகக் கூறுகின்றன.
ஜாதிப் பிரிவினைகளைச் சொல்லுமிடத்து, அந்தந்தச் ஜாதியாரின் உயர்வுதாழ்வுகளை அனுசரித்து, இம்மைக் கும் மறுமைக்குமுரிய எல்லாச் சடங்குகளும் சொல்லப் பட்டிருக்கின்றன. இவையனைத்தையும் குறைவற அனுஷ்டிப்பவன் தேவலோகத்தை அடைவான். மோட்சம் என்று ஒன்றிருப்பதாக அக்காலத்தார் உணர்திருக்க மாட்டாராகையால், அவ்வகையில் இவர்களின் அறிவு எவ்வளவு தூரம் முயற்சியடைந்திருந்தது
(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101126/news06.html

ஞானசூரியன்-6

ஞானசூரியன்
(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008)
உரை நூற்களாகையால், இந்து மதத்தின் உண்மைக் கருத்துகள் ஸ்மிருதிகளால் அறியமுடியும். இந்நூற்களின் கொள்கைகளை ஆசாரம், விவகாரம் என இரண்டாகப் பிரிக்கலாம். முதற்பிரிவில் வருணாச்சிரம தருமங்கள், உணவின் பாகுபாடுகள், பதார்த்தங்களைச் சுத்தி செய்யும் முறைகள். தானம், சிரார்த்தம், பிராயச்சித்தம் இவைகள் அடங்கியுள்ளன. விவகாரமோ அரசியல் முறைகளாதலால், சமய முறையில் ஆசாரத்தைப் போல் அவ்வளவு பொறுப்பில்லை.
கவுதம, நாரதசங்க, பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், ஸ்வாயம்பு, ஸ்வாயம்புவ முதலியஅநேக ரிஷிகள் தரும நூற்களை இயற்றியுள்ளார்கள். இவைகளில் மனுஸ் மிருதிதான் சிறந்தது. சாந்தோக்கிய பிரமாணத்திலும் வேறு பல நூற்களிலும் இதை (மனு)ப் புகழ்ந்து கூறியிருக்கிறது. அவைகளில் சில வருமாறு:
(1மனுர்வையத் கிஞ்சிதவதத் பேஷஜம் (மனுவின் வாக்கு, நோயாளிக்கு மருந்துபோல மனிதனுக்கு இதத்தைக் கொடுக்கும். ஆதலால், சிரேஷ்டமன பிரமாணமாம். இது சாந்தோக்கிய பிரமாணத்தில் உள்ளது.) மற்றும்:-
வேதார்த்தோப நிபந்ஸ்முருத்வாத்
ப்ராதான்யம் ஹிமனோ: ஸ்ம்தரும்:
மன்வர்த்த விபரீதாது
யாஸ்மிருதி; ஸாநசஸ்யதே
நானாசாஸ்த்ராணி சோபந்தே
தர்க்கவ்யா கரணானிச:
தர்மார்த்த மோக்ஷோபதேஷ்டா
மனுர்யாவந்நத் ருஸ்யதே
பொருள்: மனுவின் வாக்கு வேதத்தின் உரையா தலால், வேதம் போலவே பிரமாணமாம். மனுஸ் மிருதிக்கு முரண்பட்ட ஸ்மிருதிகள் ஏதேனுமுளதேல் அவை பிரமாணமாகா. தர்க்கம் வியாகரணம் முதலிய சாஸ்திரங்களும் இவ்வாறே (பிரகஸ்பதி 2யாகமத்தில் 3நிரவ்யாஹ வசனம்)
இக்காரணங்களைக் கொண்டு இந்நூலில் பிரமாணவாக்கியங்கள் பெரும்பாலும் மனு ஸ்மிருதி யிலிருந்தே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.
1. மனு: மந்திரம் வேதமென்பது இக்காலத்து ஆசிரியர்களின் உரை. இது முற்காலத்திய கருத்துக்கு ஒத்து வராததால், தள்ளத்தக்கதேயாகும்.
2. ஈண்டு ஆகமம் என்ற சொல் தரும நூலுக்காம்.
3. நிரவ்யாஹர் என்பார் ஓர் இருடி.
இரண்டாம் அத்தியாயம்
வைதிக கால (வேதம் எழுதிய கால)த்தில் விண் ணுலக வாழ்க்கையையே முத்தி என்று எண்ணப்பட் டிருந்தது. ஆயினும், அங்குள்ளவர்களாகிய தேவர் களுக்குள்ளும் உயர்வு தாழ்வுகளும் காமம், வெகுளி மயக்கங்களும் இருந்தனவாக வேதத்திலேயே கூறப் பட்டுள்ளதால், சுவர்க்கத்தில் துக்கமில்லை என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. அத்தகைய சுவர்க் கத்தை யாகத்தினால்தான் அடையமுடியும். சுவர்க் கத்தை அடைவதற்குக் காரணமாகிய யாகத்தை நடத்துவிப்போர்கள் புரோகிதர்களாகிய பார்ப்பனர்களே. ஆதலால், சுவர்க்கத்தின் திறவுகோல் அவர்களிடத் தில்தான் இருக்கிறது என்று நம் மக்கள் பெரிதும் மயங்கினார்கள். அதுபற்றியே ஜாதி வேற்றுமையும் உண்டாயிற்று,. மேலும், புரோகிதர்களுக்குப் பூதேவ ரென்ற பட்டத்தைச் சாற்றிப் பொதுமக்கள் வழிபட்டு வந்ததும், வருவதும் இவ்வுரிமை (சுவர்க்கம் அடைவிக்கும் உரிமை) பற்றியேயாகும்.
வரவர மக்களுக்கு அறிவு வளர்ந்து வரவே, ஆத்மா வைப்பற்றிய கவலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதன் பயனாகத்தான் உபநிடதங்கள் பல ஏற்பட்டன. அவற்றுள் பெரும்பகுதியும் பகவான் கவுதம புத்தருக்குப் பிறகே உண்டாயினவென்றும் முன்னரே கூறியுள்ளோம். ஏதோ ஒன்றிரண்டு கவுதம புத்தருக்கு முன்பே இருந்தன என்று வைத்துக்கொள் வோமாயினும், அவைகளை எழுதியவர்களும் பார்ப்பனராக மாட்டார்கள். காரணம் யாதோவெனில், இவர்கள் தங்கள் தேவத் தன்மையைப் போக்கடித்துக் கொள்ள மாட்டார் களன்றோ? இதனால் மற்றைய வருணத்தாரில் உயர்ந்த நிலையிலிருந்த அறிவினால் முதிர்ந்த அரசர்களே (க்ஷத்திரியர்) உபநிட தங்களை இயற்றியவர்கள். அங்ஙனம் எழுதியவைகளை மிகவும் மறைபொருளா கக் காத்தும் வந்திருக்கிறார்கள். 1உபநிஷத்து என்ற சொல் லிற்கே (ரகசியம்) மறைத்து வைக்கத்தக்கது என்று பொருள்.
சந்தோக்கியோபநிஷத்தில், பாலாகி என்ற பிரா மணனுக்கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனையோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப் பட்டார்கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.
1. உபநிஷத்களுக்கு இராஜ வித்தை என்று மற்றொரு பெயரும் உள்ளதே இதற்குச் சான்று பகரும்.
(தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101125/news12.html

புதன், 24 நவம்பர், 2010

ஞானசூரியன்-5

ஞானசூரியன்
(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008)
வேதம் அபவ்ருஹஷேயம் (புருஷனால் செய்யப் படாதது) ஆகையால், குற்றமற்றதும் மற்றொரு பிரமாண நூலின் உதவியின்றிச் சுதந்திரமாகவும் இருப்பது என்பது வைதிகர்களுடைய கொள்கை. மேலும், எல்லா நூற்களும், ஒழுக்கங்களும் இதற்குக் கீழ்ப்படிந்தே இருக்கவேண்டும் என்பதாகக் கவுதம ஸ்மிருதியின் முதலில் வேதோ தர்மமூலம் என்ற சூத்திரத்தால் முடிவு கூறப்பட்டிருக்கிறது. வேத வாக்கியத்திற்கு முரண்படாத ஸ்மிருதி வாக்கியமும், ஸ்மிருதிக்கு முரண்படாத ஒழுக்கங்களும் பிரமாணங் களாகும்.
தத்விதாம்ச ஸ்மரணசீலே என்னும் சூத்திரத்தால் இக்கருத்தைக் கவுதமர் வெளியிட்டுள்ளார். ஆனால், இரண்டு, ஸ்மிருதிவாக்கியங்கள் ஒரு விஷயத்தைக் குறித்துக் கூறும்போது, ஒன்றுக்கொன்று முரண்பட்டால், இரண்டு பிரமாணங்களே இத்தருணத்தில் விகற்பமே கொள்ளத் தக்கது. சுருக்கமாகக் கூறுங்கால், மேற்சொன்ன ஸம்ஹிதை, பிரமாணம், உபநிஷத்துகள் இவைகளடங்கிய வேதம் தானே பிரமாணமும், தரும நூல் வேதத்தைக் கருதிய பிரமாணமும் இவைகளுக்கு முரண்படாத ஒழுக்கங் களாகும். ஆனால், வேத ஸ்மிருதிகளை ஒத்துக் கொள்ளாமல், இந்நூற்களுக்கு விரோதமான வேறொரு வசனம் யுக்திக்குப் பொருத்தமாய் இருந்தாலும் பிரமாண மென்று சொல்வது பெரிய குற்றமாகும் என்பது:
ஸ்ருதி ஸ்துவேதோவிஜ்ஞேயோ
தர்ம சஸ்த்ரம்து வைஸம்ருதி
தேஸர் வார்த்தேஷ்வமீமாம்
ஸ்யேதாப்யாம் தர்மோவிநிச்சித:
யோவமன்யேததேமூலே ஹேது
சாஸ்தராஸ் ரயாந்நர;
ஸஸாது பிர்பஹிஷ்கார்
யோ நாஸ்திகோ வேதநிந்தக - மனு
பொருள்: வேதங்களும், ஸ்மிருதிகளும் தருமத்திற்கு இருப்பிடங்களா தலால் இவைகளை யுக்தி வாயிலாக எவனாவது கண்டிக்க முயன்றால், அத்தகைய வேத நிந்தகனான நாஸ்திகனை நல்லோர்கள் ஊரைவிட்டுத் துரத்திடவேண்டும் என்றும் இதனால் அறியக் கிடக்கின்றது.
இவ்வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் சொல்லப்படுவது தான் ஹிந்து சமயம் இந்நூற்களில் சொல்லுகிறபடி ஒழுகுகின்ற மனிதன், எல்லாவகையிலும் முன்னேற்ற மடைவான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், வேதத்திற்கு அதிகாரமில்லாத தமிழ்மக்கள் தங்களை இந்துக்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் இருந்தாலும், இவர்களுக்கு வேத ஸ்மிருதிகளில் சற்றேனும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆயினும், பார்ப்பனர்களும், இவர்களை (பார்ப்பனல்லாதாரை) இந்துக்கள் என்று சொல்லுகிறார்களே எனின், இது தங்கள் சுயநலத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பார்ப்பனரல்லாதாரை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியிலேயே அமிழ்த்தி வைக்க வேண்டுமென்ற மோசக்கருத்தை உள்ளடக்கிக் கொண்டு மயக்குகின்ற பசப்பு வார்த்தை என்றறிந்து கொள்க.
சமய நூற்கள் இம்மைக்குரிய உயர்வுக்கும், மோட்சத் திற்கும் வழிகாட்டிகளன்றோ? ஆனால், இந்துக்களின் மதநூல்களில் மிகப் பழமையான இருக்கு வேதத்தில் மறுமையைப் பற்றிக் கூறுகிற பாகம் மிகக் குறைவே. இயற்கைப் பொருள்களை மேன்மைப்படுத்தித் தேவர் களாகக் கூறுவதும், அங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்ட தேவர்களிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதும் இதிலடங்கியிருக்கின்றன. இத்தகைய தேவர்களுக்கு இருப்பிடம் சுவர்க்கமும், அதை ஆட்சி புரிபவன் இந்திரனு மாவான். இதை எழுதி வைத்தவர் விரும்புகிற பொருள் களைத் தேவர்களும் விரும்புகிறார்கள். இவர்கள் வெறுக்கிறவர்களைத் தேவர்களும் வெறுக்கிறார்கள். (இதனால், பார்ப்பனர்கள் தங்களையே தேவர்களாக நினைத்துள்ளார்கள் என்று எண்ண இடந்தருகிறது. பூசுரர் என்ற பெயரும் இதற்குச் சான்றாகும்.) அருந்தல், பொருந்தல் முதலியவைகளிலும், பொழுதைப் போக்கும் மற்ற விளையாட்டுகளிலும், இவர்களுக்கும் தேவர்களுக்கும் வேற்றுமை இல்லை. இறந்து போகிற புண்ணியவான்கள் உயிருடனிருக்கும்போது, இங்குத் தேவர்களுக்குக் கொடுத்த சோமம், மாமிசம் (கள்ளு, இறைச்சி) இவைகளின் உயர்வு தாழ்வுக்கேற்றவாறு அங்கும் (சுவர்க்கத்திலும்) சோமம், அமிர்தம், அழகிய பெண்கள் இவைகளை அனுபவிப் பார்கள். புண்ணியம் முடிந்தவுடன் பழையபடியே பூமியில் பிறக்கின்றார்கள். இதுவே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட இன்பநிலையின் சுருக்கம். இத்தோத்திரங்களைப் பார்க்கிற வர்களுக்கு, அக்காலத்தில் இருந்த கொடியவர்களின் எண்ணங்கள் நன்கு புலப்படும். இந்நாட்டின் பழைய குடிகளாகிய நம்மவர்களை, இவர்கள் பலவிதத்திலும் துன்புறுத்தி வந்ததும், தங்களுக்கு உதவி செய்யும்படி இந்திரனையும் ஏனைய தேவர்களையும், அழைத்திருப்பதும் ஆகிய செய்திகளே அத்தோத்திரங்களில் மலிந்து கிடக் கின்றன.
இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்களையே வேள்வி புரியுங் காலங்களில், ஓதவேண்டிய முறைப்படிக்குக் கோவை செய்ததே யஜுர் வேதமாகும். அன்றியும், அத்வர்யு என்கிற ஓர் இனத்தாரின் (யாகத்தில் சம்பந்தப் பட்ட புரோகிதர்களுள் ஒரு வகையினர்) உபயோகத்திற் குள்ள சில நியமங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. ஸாம என்ற சொல்லிற்கே பாட்டு என்று பொருள். இதில் உத்காதா என்கிற புரோகிதக் கூட்டத்தாரால் யாக காலங்களில் பாடும் பொருட்டுப் பல ரிக்கு மந்திரங்கள் தொகுக்கப்பட்டிருக் கின்றன.
இருக்கு வேதம் போலவே, பல தோத்திரங்களும் அடங்கிய 1அதர்வ ஸம்ஹிதையில் கர்ம சம்பந்தமில்லாத தனால், மற்ற மூன்று வேதங்களோடு சேராமல் தனித்து நிற்கிறது. வேதத்தின் பயன் சுவர்ககாதி சாதனங்களான யாகம் முதலியவைகளில் மனிதர்களை ஏவுவதும், கருமங்களைச் செய்யுங்கால், பொருளை நினைப்பூட்டு வதைக் கொண்டு மந்திரங்கள் பயனையுடையன வென்றும் வைதிகர்கள் எண்ணுகிறார்கள். பிரமாணக் கிரந்தங்கள் அனைத்தும் கருமங்கள் செய்யும் முறைகளைக் கூறு கின்றன. புரோகிதர்களின் சொத்தாகிய இந்நூல் கருமங் களை விளக்கிக் காட்டுவதேயாகும். இத்துடன் முடி வடையாது, அனந்தாவை வேதா (வேதங்கள் எண் ணிறந்தன) அவைகளில் இப்போது கிடைத்துள்ளவைகள் தவிர, மற்றவை கற்றலும், கற்பித்தலும் இன்றி அறியப்படாமற் போயின. இவைகளின் (பல வேதங்களின்) பொருட்களை அறிந்த ரிஷிகள், பிறருக்கும் பயன்படுமாறு அவைகளை வெளியிட்டார்கள். அவைகளே ஸ்மிருதிகள். ஆதலால், ஸ்மிருதிகள் வேதத்தின் உரை நூற்களாம். ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட எல்லா விதிகளும் வேதத்தில் இல்லை. ஆயினும், வேத சம்பந்தங்களும் பிரமாணங் களுமாகையால், அவைகளைப் பின்பற்றியே மனிதன் ஒழுக வேண்டுமென்பது வைதிகர் (ஆரியர்)களின் முடிவு.
1. இஃது பிற்காலத்தியதெனக் கருதப்படுகிறது. காரணம் வேதமத்ரயீ என்ற வசனத்தாலென்க. -(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101124/news09.html

ஞானசூரியன்-3

ஞானசூரியன்
தொடர்-3

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
ஒரு முகம்மதியன் தோட்டி வேலை செய்பவனா யிருந்தாலும், தான் முகம்மது மதத்தினன் என்கின்ற உரிமையால், மவுல்வி (மதபோதகன்) ஆக வேண்டு மென்றாலும் ஆகலாம். பணம் திரட்டிப் பெரிய பிரபு (சாயபு) ஆக வேண்டுமென்றாலும் ஆகலாம். துறவியாக வேண்டுமென்றாலும் ஆகலாம். தேவாலயம், பாடசாலை முதலிய இடங்களிலும் இவனைக் குறித்து யாதொரு வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இவ்விதமே புத்த சமயிகளுக்குள்ளும், கிறித்துவர்களுக்குள்ளும் எல்லோருக்கும் சமமான உரிமை இருப்பதை நன்கு உணர்தல் வேண்டும்.
இந்துக்களின் நிலைமையோ இவைகளினின்றும் எவ்வளவோ வேற்றுமை உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்து மதத்தினுடைய சாதிக்கோட்டையானது சமாதான காலங்களில் நல்லெண்ணத்துடன் பிரவேசிக்கின்ற நண்பனையும் பிரவேசிக்கவொட்டாமல் தடுக்கின்றது. முன் கூறப்பட்ட முகம்மதியர் முதலிய சமயத்தாரின் சமுதாயப் பெயர், அந்தந்தச் சமயத் தலைவனது திருநாமத்தைத் தலையில் சூடிக் கொண்டு விளங்குகின்றது. இந்துவென்னும் பொதுப்பெயரை, அதன் உண்மையை உணராமலேயே அதனை அநேகர் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து என்றும், இந்தியர் என்றும் வழங்கிவரும் சொற்கள் நமது நாட்டிலிருந்து வழங்கிவரும் எந்த மொழியினின்றும் தோன்றினவல்ல. மற்ற வேற்று நாட்டாரால் நமக்கு அப்பெயர்கள் அளிக்கப்பெற்றன. இவற்றை நமக்குத் தந்தவர்கள பாரசீகர்கள். அவர்களின் மொழியில் இப்பதங்களுக்கு நாகரிகத்தன்மை இல்லாத வர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருடர்கள் என்பன முதலிய பல இழிந்த பொருள்கள் காணப்பெறலாம். இப்பெயரை நாம் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுறுகின்றோம். இதில் வியப்பிற்கு இடமில்லை. ஏனென்றால், முதலில் நமது நாட்டில் புகுந்து ஆரியர்களால் அளிக்கப்பெற்ற 1தஸ்யூ (கொள்ளைக்காரன்), தாசன் (அடிமை), சூத்திரன் (திருடன்) முதலிய இழிவான பெயர்களை இங்குள்ள பழைய குடிகளின் கால்வழிகளாகிய நாம் இன்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஒருவனை வஞ்சித்த
1. தஸ்யூ - தாசன், சூத்திரன் என்னும் பெயர்களை வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் பலவிடங்களிலும் பார்க்கலாம்.
நம்மை மற்றொருவன் வஞ்சிக்கும்போது துக்கப்படுவது தகுதியன்று. இம்மதத்தில் (இந்து) இருக்கிற பலதிறப்பட்ட கொள்கைகளும் பெரும்பாலும் வெளிப்படை யாகையால், ஈண்டு விவரித்துக் கூறவில்லை. ஆனாலும், இந்துக்கள் எனப்படுவோரில் சிலர் தவிர, ஏனையோருக்கு இந்து மதத்தின் உருவம் இன்னது, அதை உணர்த்தவல்ல நூற்கள் இன்னின்னவை; அந்நூற்களால் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறிவு சற்றேனு மில்லை. சனாதன தர்மம் (மிகப் பழைய தர்மம்) வருணாச்சிரம தர்மம் என்பன முதலிய சில பெயர்களும் இதற்குக் கொடுத்துத் தூயதாகக் கருதுகிறார்கள். ஆயினும், பெயருக்குத் தக்க பொருளைத் தருவதாக இல்லை. நாம் விரும்புகிற பொருள் மற்றொருவனிடம் இருக்கிறவரையில் நாம் அதை வைத்திருப்பவனுக்கு அடிமையாவோம். பணக்காரனது வாசலில் காத்துநிற்கிற பிச்சைக்காரனையும், தான் காதலித்த கட்டழகியின் ஏவற்படிக்குப் பாவைபோல் கூத்தாடுகிற காதலனையும் இவ்வடிமைத் தொழில் நிலைக்கச் செய்தது. இவ்விருவராலும் விரும்பப்படுகிற செல்வத்திற்கும், அழகுக்கும் முறையே பிரபுவும் பெண்ணும் உடையவர்களா யிருப்பதேயாம்.
அவ்வாறே நமது உள்ளத்தில் இருந்துகொண்டே நம்மை அடிமை யாக்குவது இந்த ஆசைதான். இதற்குரிய பொருளை அடைந்தவுடன், அதன் கண்ணிருந்த மேலான எண்ணமும், அத்துடன் அதைக் குறித்த ஆசையும் போய்விடுகின்றன.
இதனால்தான் அஸ்வாதீனேகாம (விரும்பிய பொருள் வசப்படாத வரையில் ஆசை) என்று பெரியோர்கள் மொழிந்தார்கள். பயனற்ற பொருளைக் குறித்துச் சிலர் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு, அத்தகைய பொருள்களிடத்தும் ஒவ்வொரு வேளை விருப்பம் வைப்பதுண்டு. இது ஆராய்ச்சி செய்யாமை யினாலேயே நிகழ்வது.
எல்லா மனிதர்களுடைய மனமும் 1ஞானவிழுப்பத்திற்கு அடிமையாய் இருக்கிறது. இது சாஸ்திரங்களுக்குள் இருக்கிறதென்றும், சாஸ்திரங்கள் ஞான ரத்தினக் களஞ்சியங்கள் என்றும் பெரும்பான்மையாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் ஒன்றுக்கும் உதவாத தாயினும், ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் விரும்புகிற பொருளைச் சேமித்து வைத்திருக்கிற களஞ்சியம் இதுவே; மோட்சம் இதற்குள்
1. ஞானத்தில் பிறவித்துன்பம் அடியோடு தொலைந்து பேரின்ப சித்தப் பெருவழியை நல்குவதாக இருத்தலிலென்க.
அடங்கியிருக்கிறது என்றிவ்வாறு புகழ்ந்து கூறி மக்களை நம்பச்செய்தும், அந்தச் சுவடி பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியதாகவும் இருந்தால், அந்தச் சுவடியும் மொழியும் எவன் வசம் இருக்கிறதோ, அவனுக்கு மனிதர்கள் அடிமையாவது திண்ணமே. பொருளாக விருந்தால் கொள்ளையடித்தோ மற்றெவ்விதமாகவோ கைப்பற்றி விடுவார்கள். கல்வியானது அதையுடைவன் விரும்பிக் கொடுக்காதவரையில் எங்ஙனம் அடைய முடியும்? உண்மையாக அந்தச் சுவடியில் பொதுமக்களுக்கு நல்ல பயனைக் கொடாததும், தீய ஒழுக்கங்களைப் பழக்குவதும், தீய வழியில் செலுத்துவதுமான கொள்கைகள் நிறைந் திருந்தாலும், எல்லோராலும் விரும்பத்தக்கது. இது ஒன்றேயென்று புகழ்ந்து கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காலம் வரையில், அதை வைத்துக் கொண்டிருப்பவன் கழுதைக்குச் சமனாக இருந்தாலும், அவனை எல்லோரும் வணங்குவார்கள்.
இவ்வாறே தீய எண்ணங்களையுடைய பார்ப்பனர்கள், வேதம் எல்லா விருப்பங்களையும் தரவல்லது எனக் கூறிக்கொண்டு, அது யாருக்கும் பயன்படாத மொழியிலிருப்பதால், அதனைப் புகழ்ந்துகூறிக் காப்பாற்றி வருவதோடு, நம்மவர்களைக் குறித்து,
பத்யுஹ்வா ஏதத்ஸ்மசானம்
சூத்ரஸ் தஸ்மாத் சூத்ரஸமீபேநாத்யேதய்வம்
அதாஸ்ய வேதமுபஸ்வருண்வதஸ்த்ர
புஜதுப்யாம்ஸ் ரோத்ரபூரணம்
வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விட வேண்டும்.
1சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையாதால், அவன் பக்கத்தில் வேதமோதக் கூடாது.
வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத
வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.
1. பார்ப்பனர்கள் தங்கள் இனத்தாரைத் தவிர, மற்ற யாவரையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதி முதலிய நூற்களும் அவர்களுடைய கூற்றுக்கு அனுகூலமாகவே இருக்கின்றன.
இவ்வாறு நல்லோர்கள் காதினால் கேட்கவும் பெறாத அநேகக் கொடிய விதிகளை ஏற்படுத்தி, இந்த விதிகளும் வேதத்திலுள்ளது; வேதம் கடவுளால் பிராமணர்களாகிய எங்களுக்குச் சொந்தமாகத் தரப்பெற்றது என்று வாய்ப்பறை சாற்றித் திரிவதோடு, தங்களது மோசவலையில் சிலரைச் சிக்கவைத்து அவர்கள் மூலமாகவும், சில இடங்களில் (தங்களுக்குச் சமூக பலமுள்ள இடங்களில்) தாங்களாகவும் தங்களுக்குக் கீழ்ப்படியா நம்மவர்களைப் படுத்திய பாடு இவ்வளவெனச் சொல்லத்தரமன்று. மகாமேதாவிகளாகிய சிலரும் உயிருக்காகப் பயந்தோ, மற்றெதனாலோ, நான் பிராமண தாசன் என்று சொல்லியிருப்பது போஜசம்பு முதலிய நூற்களால் காணக்கிடக்கின்றது. மகாகவியும் பெரிய வள்ளலுமான போஜராஜர் பிராமணர்களைப் புகழ்ந்து கூறியிருப்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாகக் கூறுகிறேன். எத்தகைய பெரியாரையும் ஏமாற்றும்படியான இந்திரஜால வித்தையைக் கற்ற பார்ப்பனர்களின் மோசக் கருத்து, எவ்வளவு தூரம் பலனைக் கொடுத்து வருகிறதென்பது எல்லோருக்கும் அனுபவமானதால், அதிகம் சொல்லத் தேவையில்லை. இக்காலத்தில் இந்து என்று வெட்கமின்றித் தங்களைக் குறித்துச் சொல்லித் திரிகின்ற பலரும் இம்மோசவலைக்குள் அகப்பட்டவர்களே.
ஆனால், மோசம் பண்ணுவதற்குக் காலம் எப்பொழுது வாய்க்குமோ? பட்டப்பகலில் பலர் சேர்ந்திருக்கும்போது களவாடுவது கடினமன்றோ? அதைப்போலவே பார்ப்பனர் களுக்கும் தங்களது ஜாலம் பலிக்கிற காலம் மலை யேறிவிட்டது.

- http://viduthalai.periyar.org.in/20101122/news11.html

செவ்வாய், 23 நவம்பர், 2010

ஞானசூரியன்-4

ஞானசூரியன்


(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008)
மந்திரத்தை மறைத்து வை என்று எந்நூற்களைப் பற்றிப் பார்ப்பனர் கூறிக் கொண்டிருந்தனரோ, அவைகளையெல்லாம் அச்சு வாகனத்தில் ஏற்றி அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். குறைந்த விலைக்கும் விற்கின்றனர். வேண்டுவோர் பெற்றுப் படிக்கலாம். அவைகளில் சொல்லப்பட்டிருக்கிற வசனங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உயிருக்குக் கேடில்லாமல் தெரிந்துகொள்ளலாம்; இதுவே நமது நற்காலம். இத்தருணத்தை நன்றியறிதலுடன் பயன்படுத்திக் கொள்வோமாக. இல்லாவிடில், செய்ந்நன்றி கொன்ற பாவத்திற்காளாவோம். ஆதலால், இந்துக்களின் சமய நூற்கள் எவை? அவைகளில் கூறப்படும் பொருள்கள் எவை? தலைவர்கள் யார்? இவைகளைக் குறித்து ஆராய்வோம்.
இந்துக்களின் சமய நூற்கள், சுருதம், ஸ்மிருதம் என இருவகைப் படும். சம்ஹிதைகள், பிராமணங்கள், உபநிஷத்துகள் ஆகிய இவைகளடங்கிய நான்கு வேதங்களைச் சுருத மென்பார்கள். இவ்வேதங்கள் முதல் முடிவில்லாதனவும் எவராலும் உண்டு பண்ணாதவையுமானதால் இப்பெயர் பெற்றதென்று ஒரு சரார் கூறுகின்றனர், மற்றொரு சாரார் வேதம் கடவுளால் உண்டு பண்ணப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால், வேதம் கடவுளால் உண்டுபண்ணப்பட்டது என்றால், மனித இயற்கைக் குணமாகிய மறதியினால் ஒன்றொடொன்று முரண்படக்கூறுதல் முதலிய குற்றங்கள் வேதத்தில் ஏற்படும். இத்தகைய குற்றங்கள் வேதத்தில் இருப்பதாக, வேதத்திற்குத் தலைவனுளன் என்று ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் சொல்லவில்லையாதலால், மனிதனால் உண்டு பண்ணப்பட்டதன்று. இரண்டாவது குற்றமில்லாத ஈசுவரனால் செய்யப்பட்ட வேதத்தில் குற்றமில்லை என்று சொல்லுவோமானால், ஈசுவரன் ஒருவன் உளன் என்பதை உறுதிப்படுத்துவதற்கு வேதம் தவிர, வேறு பிராமண நூலில்லாததால் 1ஒன்றையொன்று பற்றிய குற்றம் உண்டாகும். ஆதலாலும் ஈசுவரனை வேதத்திற்குத் தலைவனாக ஒப்புக்கொள்ள முடியாது. (இவைகளில் சிருஷ்டி கர்த்தாவாகிய ஈசுவரனை இவர்களின் வேதத்தில்தான் நிலைபெறச் செய்யவேண்டும் என்பது உண்மையே) வேதம் நித்தியம் என்பதை நிலைநாட்டு வதற்கு ஓர் அனுமானப் பிரமாணமும் கூறுகின்றனர். அதையும் ஈண்டு எடுத்துக்காட்டுவோம்.
அது வருமாறு:
வேதாத்யயனம் ஸ்ர்வம், குர்வத்யயன பூர்வகம்
வேதாத்யயன ஸாமான்யாதாது னாத்யயனம்யதா
வேதம் கற்றுக்கொடுப்போர் மற்றொருவனிடத்திலிருந்து கற்றுக் கொண்டவர்களாதலால், வேதம் நித்தியம். அப்படியானால், முதன் முதல் கற்பிப்பதற்கு ஆசானாயிருந்த கடவுளுக்கு வேதம் கற்றுக் கொடுத்தவர் யார்? அவரே வேதத்தை உண்டாக்கிக் கற்றுக்கொடுத்தார் என்று கூறுவோமாயின், வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விஷயங்களைக் குறித்த, முற்றறிவும் ஈசுவரனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவதால், அவையனைத்தும் படைப்புக்கால முதல் இருந்தனவென்று ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அது பொருந்தாது; ஆதலால், ஈசுவரனுடைய முற்றறிவுக்கு விஷயமாகிய வேதத்தைப் படைப்புக்கால முதல் நினைத்துக் கற்பித்தார் என்று ஒப்புக்கொள்வதே யுக்திக்கு ஒத்ததாம்.
1. இதை வடநூலார் அன்யோன்யாஸ்ரய தோஷமென்பர் அல்லது பூர்வாபரவிருத்தம் என்பர்.
இந்த வாதத்தின் இனிமையையும் இந்த வாதத் தலைவர் களின்அறியாமையையும் விளக்கும் பொருட்டே இவ்வளவு தூரம் சொல்ல நேர்ந்தது. இனி, ரிக் ஸம்ஹிதையும், அய்தரேயம், கவ்ஷீதகி என்ற பிரமாணங்களையும் அய்தரேயாரண்கயகம் முதலிய உபநிஷத்துகளும் இருக்கு வேதத்தைச் சேர்ந்தவை. யஜுர்வேதம் ஒன்றையே கிருஷ்ண யஜுஸ், சுக்கில யஜுஸ் என இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இவைகள் இரண்டிலுள்ள மந்திரங்கள் பெரும்பாலும் ஒரே விதந்தான். ஆனால், அம்மந்திரங்களின் வைப்பு, சற்று முறை பிறழ்ந்து காணப்படுகிறது. நிற்க, வேதத்திற்கும் கருமை, வெண்மை முதலிய நிறங்கள் உண்டா? என்று அய்யப்படுகின்றவர்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள் ஒரு கதை கூறுவது வழக்கம். அது வருமாறு:
வேதத்தைப் பகுத்த வியாச முனிவரின் சிஷ்யர்களுள் ஒருவரான வைசம்பாயனரிடம் யாக்ஞவல்கியர் வேதத்தை உணர்ந்தார். கடைசியாக ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு வைசம்பாயனர் இவரிடம் மனத்தாபம் கொண்டு, தன்னிடம் கற்றறிந்த வேதங்களைத் திருப்பித் தரும்படி கேட்டார். யாக்ஞவல்கியரும் தமது தவ வலிமையால் தாம் கற்றுணர்ந்த வேதத்தைக் கக்கிவிட்டார். இவ்விதம் வாந்தி பண்ணப்பட்டவேதத்தைக் குருவின் ஆணைப்படி வைசம்பாயனருடைய மற்றைய மாணாக்கர்கள் விழுங்கி விட்டார்கள். அது சமயம் அவர்களது புத்தியானது தெளிவாக இல்லாமையால், இந்த யஜுஸ் கருமை நிறத்தை அடைந்தது. இதுதான், தைத்ரீய ஸம்ஹிதை என்னும் பெயரால் வழங்கி வருகின்றது. சதபதப் பிரமாணம், பிரகதாரண்ணிய கோபநிஷத்து ஆகிய இரண்டும் இதைச் சார்ந்தவையே. சுக்கில யஜுர் வேதத்திற்கு வாஜஸனேயீஸம்ஹிதை என்று மற்றொரு பெயரும் உண்டு. இதைச் சார்ந்ததே ஈசா வாஸ்யோபநிஷத்தாகும். ஸாமம், அதர் வணம்இவ்விரண்டிற்கும் கணக்கற்ற பிரமாணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. உபநிஷத்துகள் ஏராளமாக இருந்தாலும், ஏறக்குறைய பத்து உபநிஷத்துகளை 1வைதிகம் என்றும், மற்றவைகளை வேதத்திற்குப் புறம்பானவைகள் என்றும் சொல்லுகிறார்கள்.
உபநிஷத்துகளில் ஆன்மாவைக் குறித்த விஷயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பகுதியும் கவுதம புத்தன்
1. வேத சம்பந்தம்
பிறந்த பிறகே ஏற்பட்டவை. அல்லா உபநிஷத்தும், கிறிஸ்து உபநிஷத்தும் இருப்பதிலிருந்தே இவைகள் பிற்காலத்தியவைகள் என்பது தெளிவாய் விளங்கும். சமஸ்கிருத இலக்கியத்துள், ஃசந்தேச காவியம் என்ற ஒரு பகுதி இடைக் காலத்தில் ஏற்பட்டிருப்பது போல், உபநிஷத்து என்கிற ஒரு பகுதியும் ஏற்பட்டிருப்பது உண்மை. உபநிஷத்தை உண்டுபண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனாதியும் வேதமுமாகுமென்று உறுதிப்படுத்துவதற்கு, இந்த இந்திர ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்கி இருக்கிறார்கள். இதைப்பற்றி மற்றோரிடத்தில் விரிவாகக் கூறுவோம். இனி, ஸ்மிருதம் என்ற இரண்டாவது பிரிவில் ஆறு அங்கங்கள், புராணங்கள், தரும சாஸ்திரங்கள் (மனு, யாக்ஞவல்கியர் முதலியோரால் எழுதப் பெற்றவை) முதலிய நூல்களும், ஆகமங்களும் தரிசன கிரந்த (நியாய, வைசேஷிக, சாங்கிய, யோக, வேதாந்த)ங்களும் அடங்கும். இவற்றுள் ஆறு அங்கங்களாவன: வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருமங்களைச் செய்யும் முறையை விவரித்துக் கூறுவனவும், வேத மொழியிலுள்ள சில தனிப்பட்ட சொற்களுக்குப் பொருளையுணர்த்துவனவுமாகும். மேற்கூறப்பட்ட 1தரிசன நூற்கள் ஆறும், கவுதம ஸ்மிருதி முதலிய சில தர்ம சாஸ்திரங்களும் 2ப்ராதி சாங்கியங்களும், 3சூத்திர வடிவினவாக இருக்கின்றன.
தரிசனங்களுள் சாங்கியமும், வேதாந்தமும் தவிர ஏனைய பூர்வ மீமாம்சை, நியாயம், வைசேஷிகம், யோகம் இவைகளைச் சமயக் கொள்கையுடன் பெரும்பாலர் ஏற்றுக்கொள்வதில்லை; புராணங்கள் பதினெட்டு; அன்றியும் புராணங்கள் என்ற பெயருடன் அளவற்ற நூற்களும் காணக்கிடக்கின்றன. தருமம் என்ற சொல்லுக்கு, நூன்முறைப்படி ஒவ்வொரு வருணத்தானும் கட்டாயம் செய்யத்தக்க தொழில் என்றே பொருள் கொள்ளக்கிடக்கின்றது. இதற்கு உதாரணமாகச் சோதனா,
ஃ. சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் இவை ஆறுமாம்.
1. தரிசனம் - சாஸ்திரம்
2. இதற்குச் சரியான தமிழ்ப் பெயர் விளங்கவில்லை. ஆயினும், வட மொழியிலும் வேறு பெயர் காணப்படவில்லை. இது வேத இலக்கியத்திற்கு இலக்கணமாமென்பர்.
3. சூத்திரம் - குறள்.
லட்சணோர்த்தோ தர்மம் (ஒவ்வொரு வருணத் தானையும் தத்தந் தொழிலில் ஏவுவதாகிய இலக் கணத்தையுடையதே தருமம்) என்று ஜைமினி பூர்வமீமாம்சையிற் கூறுகிறார். எனவே, அவசியம் செய்யத்தக்க தொழில் என்பதனால், யாகம் முதலியவைகளைச் செய்தே தீரவேண்டும் என்பது பெறப்பட்டது.

- http://www.viduthalai.periyar.org.in/20101123/news11.html

திங்கள், 22 நவம்பர், 2010

20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலி

ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன.

இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது.

யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்ணில் புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்கின்றது.

சிறீலங்காப்படையினரின் வன்னிஇனஅழிப்பின் போது ஆறிற்கு மேற்பட்ட தடவை ஸ்ரீலங்காபடையின் வான்தாக்குதல்களைஎதிர்கொண்டு 2007 ஆம்ஆண்டு 11மாதம் 27 ஆம்நாள்கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் நடுப்பணிமனை மீது சிறீலங்கா வான்படையினர் நடத்திய ஊடக அடக்குமுறையின் வான்தாக்கதலின போது வானொலியின் அறிவிப்பாளர் உள்ளிட்ட மூன்று பணியாளர்களை இழந்துள்ளது.

நாட்டுப்பற்றாளர்களான அறிவிப்பாளர் இசைவிழி, மற்றும் தொழில்நுட்டபவியலாளர்களான சுரேஸ்லிம்பியோ, தர்மலிங்கம் ஆகியோரை இழந்தது பின்னர் 23 தாடவைக்கு மேல் இடப்பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்கால் வரை மக்களுக்கான செய்தியினையும் விழிப்பினையும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் மே மாதம் 15 ஆம்நாளுடன் தனது செயற்பாட்டினை பண்பலையில் இடைநிறுத்தியது, அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது, கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலிகளின் குரல் வானொலி தனக்கான அறிவிப்புக்களை இணையத்தளத்திலும் செய்கோளிலும் தற்போதும் மேற்கொண்டுவருகின்றது அந்தவகையில் எதிர்வரும் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை சிற்றலை ஊடாக உலத்தமிழ்மக்களுக்கும் செய்கோள் மற்றும் பண்பலை ஊடாகவும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையநாள் வானோசை 20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலியோடு இணைந்துகொண்டிருக்கம் நேயர்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

- sarvadesavanoli@yahoogroups.com

ஞானசூரியன் தொடர் - 2

ஞானசூரியன்

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
ஞான சூரியன்
முதல் அத்தியாயம்
சக்தி சத்தர் சனாதனப் பேரொளிச்
சித்தர் முத்தர் திருமிகு மேனியர்
சுத்த நெஞ்சுறுத் தூய்மைகண் டுய்ந்திடப்
பத்தி யாலவர் பாதம் பணிகுவாம்
செழுந்தமிழ்க் குடித்தீரரே; வீரரே;
எழுந்து மின்னே இழிதகை யோர்ந்துநாம்
அழுந்தி நாளும் அடிமைசெய் காரணம்
கொழுந் தறிவினிற் கூர்ந்துணர் வாமரோ.
நமது நாட்டின்கண் தமிழர்களாகிய (திராவிடர்கள்) நம்மவர்கள் கல்வி கற்பதில் சிறிது காலமாகவே ஊக்கங்கொண்டு உழைத்து வருகின்றனர். அதன் பயனாக, நம்மவர்களின் மனக்கண்ணை மூடியிருந்த அறியாமை என்னும் மாசு சிறிது சிறிதாக நீங்கிற்று. நீங்கவே, இதுவரையிலும் நம்மை ஏமாற்றி வந்த ஆரியப் பார்ப்பனர்களின் சமய நூற்களாகிய, சிரவுத, ஸ்மார்த்த தருமங் களின் மேற்பூச்சு விளங்கலாயிற்று. அதனால், அந்நூற்களில் நமக்கிருந்த மதிப்பு குறையலாயிற்று. எதிர்காலத்தில் நம்மவர்கள் அடையும்படியான மேல் நிலையைக் குறிக்கிற இத்தருணத்தில், ஆரிய சமாசத்தினர், இந்து சபையார், பிரம்மசமாசத்தினர் முதலிய பல குழுவினரும் மேற்சொன்ன நூற்களின் பழைய பூச்சைத் துடைத்துப் புதிதாகப் பூசி மினுக்குமாறு, வேஷத்துடன் நம்மவர்முன் காட்டி, நம்மவர்களை ஏமாற்ற முயன்று வருகிறார்கள். எனவே, இவர்களின் எண்ணத்தை உற்று நோக்குமிடத்து, மேற்குறித்த சமய நூல்களிலுள்ள மூட நம்பிக்கைகளை நம்மவர்களின் உள்ளத்தில் தழைத்தோங்கி வளரச் செய்து, நம்வர்களை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியினின்றும் கரையேற வொட்டாமல் தடுக்க வேண்டுமென்பதேயல்லாது வேறில்லை என்றே கொள்ளக் கிடைக்கும். இவர்களின் முயற்சியும் சிறிது சிறிதாகப் பயன்கொடுத்துக் கொண்டே வருகிறது. இம்மைக்குரிய பயன்களுள் சிலவற்றை இவர்களின் வயப்பட்ட (சூத்திரர் என்று அழைக்கப்படுகிற) நம்மவர்கள் அடைகின்றார்களெனினும், பார்ப்பன நூற்களாகிய வேதம், ஸ்மிருதி முதலியவைகட்கு இவர்கள் சொல்லுகிற யுக்தி வாதங்களும், உரைகளும் அந்தந்த நூற்களுக்கு1 மகீதரர் முதலிய பழைய உரையாசிரியர்களின் கருத்திற்கு ஒத்திட்டுப் பார்த்த பிறகே ஒப்புக்கொள்ளத் தக்கவை. இதற்காக முயற்சிப்போர், தயானந்த திமிர பாஸ்கரம் முதலிய நூற்களின் ஆசிரியரான2 பண்டித ஜ்வால்ப்ரஸாத் மிஸ்ரஜி முதலிய மேதாவிகளைப்போல் இவர்களைக் கண்டிக்க முற்படுவார்கள். நாம் இங்கு எதைக்குறித்து ஆராயப்போகிறோம் என்றால், நமது நாட்டில் யாவராலும் பிராமணங்களாகக் கொள்ளப்படுகின்ற வேதம், ஆகமம், ஸ்மிருதி இவைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங் களையும், அவைகளின் உண்மைக் கருத்துகளையுமேயாம். பகவான் புத்தன் அவதரிப்பதற்கு முன்னும் அதன் பின்னரும் உள்ள நமது தேச சரித்திரத்தைப் பதினாறு ஆண்டுகளாக ஆராய்ந்தவுடன், நமது தேசம் முழுவதும் நேபாளம், காஷ்மீரம், சிலோன் முதலிய பல தேசங்களிலும் சஞ்சரித்து, அந்தந்த தேசத்தார்களின் முற்கால, தற்கால வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் அறிஞர்களிடத்தும், சரித்திர வாயிலாகவும், நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததன் பயனாகத் தமிழ் மக்களாகிய நம்மவர்கள் நெடுநாட்களாகவே அடிமைப்படுகுழியில் தள்ளப்பட்டிருப் பதையும், கரையேற முயற்சி செய்யாதிருப்பதையும், அறிந்த யான் நம்மவர்களின் முன்னேற்ற வழியை எடுத்துக் கூறத் துணிந்தனன். இதனால் நம்மவர்கள் அறியாமை என்னும் நித்திரையை விட்டெழச் செய்து, சமய நூல்களில் மனத்தை ஒருமுகப்படுத்திக் கீழ்க் கூறுகின்ற பொருட்களைப் படித்தறியும்படி மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். ஆராய்ச்சி இல்லாமல் ஒருவரை யொருவர் ஆட்டு மந்தையைப்போல் பின்பற்றி நடக்கும் இயற்கையுள்ள நம்மவர்களுக்கு, உண்மையை அறிய வேண்டுமென்னும் விருப்பமும், அதற்குரிய ஆற்றலும் மேன்மேலும் பெருகி வளரும்பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
உயிர்களுக்கு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் இயற்கையிலேயே எற்பட்டுள்ளது. இதன் பொருட்டே முயற்சியும் நடைபெற்று வருகின்றது. ஆனால், அதற்கு எதிர்மறையான பலனை அனுபவிக்க நேருவதும் உண்டு. ஆயினும், எல்லா உயிர்களும் மேன்மையைத்தான் விரும்புகின்றன. இந்த மேன்மையும் இம்மைக்குரியது, மறுமைக்குரியது என இருவகைப்படும். மனிதன் தன்னால் பழக்கப்பட்ட எந்த விஷயத்திலும் நிறைந்த சுகத்தை அனுபவிக்காததனால், உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் முதன் முதலாக மனிதனது உள்ளத்தில் எழுந்தன. இவ்வாறு எழுந்ததன் பயனாகவே இப்போது பல வேற்றுமைப்பட்ட கொள்கையுடைய பல்வேறுவகைச் சமயங்களைக் காண்கிறோம். அவைகளில் இவ்வேற்றுமையினால் சமூக முன்னேற்றத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன பிரிவினையானது எல்லாச் சமயத்தினராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளத் தக்கதேயாகும். இதில் சமுதாயத்தை (ளுடிஉயைட), கல்வித்துறை (நுனரஉயவடியேட), ஒழுக்கம் (ஆடிசயட), அரசியல் (ஞடிடவைஉயட) ஆகிய நான்கு வகையான முன்னேற்றங் களையும் இம்மைக்குரியது என்கிற முதலாவது இனத்திலும், தவம், யோகம், ஞானம், இவைகளை மறுமைக்குரியது என்கிற இரண்டாவது இனத்திலும் சேர்க்க வேண்டும். இம்முன்னேற்றங்கள் எல்லாச் சமயங்களுக்குள்ளும் ஒரே தன்மையா யிருப்பின், வேற்றுமைகளுக்கு வழியேயில்லை. ஆனால், உருவங் களுள் வேற்றுமை காணப்படுவதுபோலச் சமுதாய விஷயங்களிலும் வேற்றுமை காணப்படுகின்றது. மேற்கூறிய வேற்றுமைகளால்தான் மத வேற்றுமைகளும் உண்டாயின.
சமயங்களின் காலம்
இந்து சமயம் உற்பத்தியாகி இன்றைக்கு நூற்றுத் தொண்ணூற்றாறு கோடியே எட்டு லட்சத்து அய்ம்பத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்தெழுபத்தாறு (196,08,52,976) ஆண்டுகள் ஆகின்றனவென்று, ஆரிய சமாசத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி கணக்கிட்டுக் கூறுகிறார். அதற்கு அவர் ஏழு மனுக்களையும் அவர்களின் அரசாட்சிக் காலத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வளவு காலப் பழக்கமுள்ள இந்தச் சமயத்தைத் தங்கள் சமயமென ஒத்துக் கொள்வோரின் தொகை இருபத்தொன்றரைக் கோடியாகும். முகம்மதிய மதம் எற்பட்டு 1372 ஆண்டுகளாகின்றன. முகம்மதியர்களின் தொகை முப்பத்துமூன்று கோடியாகும். கிறிஸ்து மதம் உண்டாகி 1956 ஆண்டுகளாகின்றன. கிறிஸ்தவர்களின் தொகையோ அய்ம்பது கோடியாகும். 2498 ஆண்டாகப் புத்தரையும், திரிபீடக நூலையும் நம்புகின்றவர்கள் அறுபதுகோடி மக்கள் இருக்கிறார்கள்.
இனி இருபத்தொன்றரைக் கோடி இந்துக்களுள் ஒன்றரைக்கோடி மக்கள் பார்ப்பனர்களாவார்கள், ஏனையோர் பார்ப்பனரல்லாதவர்கள். இந்தக் கணக்குப்படி பார்ப்பனரல்லாதவர்களுள் பதினெட்டுப் பேர்களுக்கு ஒரு பார்ப்பனப் புரோகிதன் ஆகின்றான் என்று கணக்கிடலாமன்றோ? மேற்கூறிய ஒன்றரைக் கோடி பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதாரின் இனத்திலிருந்து ஒவ்வொரு காலங்களில் பார்ப்பனர் களாக மாற்றப்பெற்றவர்களும், தாங்களாகவே மாறினவர்களுமாவார்கள். குமாரில பட்டர், சங்கராச்சாரியார், இராமாநுசர், மத்துவர் முதலிய மதாச்சாரியார்கள் அநேக தடவைகள் சூத்திரர்களைப் பார்ப்பனராக்கியதாகச் சங்கர திக்விஜயம் முதலிய நூல்களாலும் தேச சரித்திரங்களாலும் அறியக் கிடக்கின்றது. உண்மையில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களல்லரென்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு, இவர்களையும் இந்துக்க ளென்றும் கூறி ஏமாற்றிய தாகவும் கொள்ளவேண்டும். இப்படிக்கிருந்தால், உண்மை இந்துக்கள் (ஒன்றரைக் கோடி) எவ்வளவு குறைவு என்பதைக் காரணத்துடன் ஆராய்வோம்.
இந்துக்கள் தவிர, மற்ற எல்லா மதத்தினருக்கும் தங்களுக்கெனச் சொந்தமான ஒரு மதத்தலைவரும், அத்தலைவரால் பரம்பரையாக வெளியிடப்பட்ட மதக் கொள்கைகளும், இவைகளடங்கிய மத நூலும் அம்மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் பொதுவாக உண்டு. விளக்கமாகக் கூறுங்கால், முகம்மதியர் களுக்கு முகம்மதுநபி என்ற சமயத் தலைவரும், குரான் என்ற மத நூலும் அம்மதத்தில் பொதுவாக இருக்கின்றன. இவர்களுள் ஒவ்வொரு ஆண் மகனும், பெண்களும் தங்கள் குருவையும் மத நூலையும் மதத் கொள்கைகளையும் முறையே அன்புடன் வணங்கியும், போற்றியும் வருகிறார்கள். புத்த சமயிகளுக்குப் புத்தர் என்னும் மதத்தலைவரும், திரிபீடகம் என்னும் மத நூலும் இருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறே கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்து என்னும் மதத் தலைவரும் பைபிள் என்னும் மத நூலும் இருக்கின்றது. இந்துக்கள் நீங்கலாக மற்ற சமயத்தினரும் ஆண், பெண் வேற்றுமையின்றி ஒவ்வொருவருக்கும் தங்கள் மத நூல்கள் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றனவோ, அந்தந்த மொழியிலேயே அதைப் படிக்கவும், அதில் சொன்னபடி ஒழுகவும் அதிகாரமுண்டு. இதில் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை காட்டப்படுவதேயில்லை. இவ்விதம் சமய நூற்களைக் கற்று, அதன்படி ஒழுகாத ஒருவனை நிந்திக்கவும் செய்கிறார்கள்.

- http://viduthalai.periyar.org.in/20101121/news08.html

ஞானசூன்யத்தை ஒழிக்க ஞானசூரியன்

மறந்துவிட்டு...
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.
குடிஅரசு, 3.11.1929
ஞானசூன்யத்தை ஒழிக்க ஞானசூரியன்
ஞானசூரியன் என்ற புத்தகம் இப்பொழுது தமிழ் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 1928 இல் தந்தை பெரியார் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த நூல் 19 ஆம் பதிப்பாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 2008 இல் வெளிவந்தது.
இந்த நூலை எழுதியவர் ஆன்மிகவாதியான சுவாமி தயானந்த சரசுவதி என்பவர். மத விசாரணை எனும் புகழ்பெற்ற இன்னொரு நூலினையும் எழுதியுள்ளார்.
பார்ப்பனீயம் என்னும் கொடிய நச்சுப் பாம்பு எத்தகையது? அவர்களால் ஏற்றிப் போற்றப்படும் வேதம், உபநிஷத்துகள், மனுதர்மம், இராமாயணம், கீதை போன்றவை எப்படியெல்லாம் பிராமண ஆதிக்கத்தை வலுவாக நிலை நிறுத்தக் கூடியவை; அதேநேரத்தில் பெரும்பான்மை இன மக்களை சூத்திரர்கள் என்று கூறி, அவர்களை எப்படியெல்லாம் உள ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் ஒடுக்கியது என்பதை ஏனோதானோ என்ற முறையில் அல்ல; பார்ப்பனர்களின் ஆதார சுருதிகளான அவற்றிலிருந்து எடுத்துக்காட்டி நிரூபித்துள்ளார்.
அதை ஒருமுறை படித்தால் போதும் மரக்கட்டை தமிழன்கூட மானமிகு மனிதனாக எகிறிக் குதித்து எழுந்துவிடுவான்.
பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். - மனுதர்மம்.
சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதைப் பிராமணன் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனு மில்லை. - மனுதர்மம்
எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கின்றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து போகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாலும் இருக்கிறதோ - அந்த நாடு பஞ்சம், நோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்துபோகும்.
பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும் சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான்.
இதுபோன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளை மனுவிலிருந்து ஞானசூரியனில் எடுத்துக்காட்டப்பட் டுள்ளன.
இந்தக் கண்ணோட்டத்தைத் தெரிந்துகொண்டு இருப்பவர்களால் மட்டுமே, இன்றைய தினம் பார்ப்பன சக்திகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும், ஊடகங்களும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு புறப்பட்டுள்ளதன் தாத்பரியத்திற்கான அர்த்தம் புரியும்.
இதனைப் புரிந்துகொண்டவர் என்கிற முறையில்தான் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் இது நாலாந்தர மக்களுக்கான சூத்திரர்களின் அரசு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே (28.7.1971) கம்பீரமாக அறிவித்தார்.
பார்ப்பன வட்டாரம் தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதற்கு இதுதான் காரணம். மத்திய அமைச்சராக இருந்த மானமிகு ஆ. இராசா அவர்களை அந்தப் பதவியிலிருந்து விலகச் செய் வதற்குக் காரணமாக இருந்து வந்ததோடு, அடுத்த கட்டமாகவும் ஆவேசத்தில் நிர்வாணமாகக் கூத்தாடு வதற்கும் இந்தப் பார்வையே காரணமாகும்.
நேற்று (21.11.2010) ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் சரி, பொதுக்கூட்டத்திலும் சரி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்து விளக்கியபோது, மக்கள் மத்தியிலே பலத்த கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஞானசூரியன்பற்றி அறிமுகம் செய்து அதனை ஒவ்வொரு தமிழ் மகனும் கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று முரசொலியில் (20.11.2010) முதல் பக்கத்திலேயே எழுதியுள்ளார்.
ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியிலேயே நூற்றுக் கணக்கான நூல்கள் விற்றன. மணமக்களுக்கே (தனமேநீ - ச. வீரமணி) ஞானசூரியன் நூலை திருமணப் பரிசாகத் தமிழர் தலைவர் அளித்தார்.
12,000 ரூபாய்க்கு ஞானசூரியன் நூல் ஈரோட்டில் விற்றுத் தீர்ந்தது என்பது சாதாரணமானதல்ல.
தமிழ்நாடு முழுவதும் இந்நூலினைப் பரப்புவதற்கான திட்டமும் உருவாகிவிட்டது. தமிழர் தலைவர் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி டிசம்பர் 6 இல் அந்தத் தொகையை அளிப்பது என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
ஜெயலலிதா அவர்கள் ஒருமுறை முதல்வர் கலைஞரைப் பரம்பரைப் பகைவர் என்றும், பரம்பரை யுத்தம் என்றும் குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொண்டால், நாட்டில் நடைபெறுவது வெறும் அரசியல் போராட்டமல்ல - ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பதை உணரலாம்.
2011 இல் நடக்க இருக்கும் தேர்தல் அதனை யொட்டிதான் இருக்கும். தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் சென்னைப் பெரியார் திடலில் 20.11.2010 மாலை நடைபெற்ற நீதிக்கட்சியின் 95 ஆம் ஆண்டு விழாவில் இதுகுறித்து குறிப்பிட்டதையும் கவனத்திலே கொள்ள வேண்டும். ஞானசூன்யத்தை ஒழிக்க ஞான சூரியனைப் படியுங்கள்! படியுங்கள்!!

- http://www.viduthalai.periyar.org.in/20101122/news07.html

சனி, 20 நவம்பர், 2010

பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?

பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?

தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ஆம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது.

உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக் கலாம் என்றும் பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும் மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்சேபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.
ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்பதாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.
இதுபோலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக் கிறது. அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927இல் எழுந்தது. நான் ஆட்சேபித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர்கார், பாத்ரோ முதலியவர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆட்சேபணைகூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தான், தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன் கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்பை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கட்சியார் எதிர்க்க நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக் கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக் கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்தத் தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்த தாகச் சொல்லுகிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம் நான் துவேஷமாய் இருந் தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களை யெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்த மாகும்.
நான் சென்ற வாரப்பத்திரிகையில் பார்ப்பனிய ஒழிப்புக் கொண்டாட்ட நாள் என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக்கின்றேன்.
இது நிற்க. பொதுவாக ஒரு விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள் என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்.
எப்படியெனில் ஒரு வியாதியை சவுக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி சவுக்கியமாய் விடுகின்றது.
அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில் பார்ப்பனியம் ஒழிந்து விடுகின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது.
இந்த நிலை ஏற்படும் வரையில்தான், நாம் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லு கின்றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனிதன் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும் நாம் கருதி ஏற்படுத்தவில்லை.
இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசியமானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என்னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.
பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலை வர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். சண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்கள் ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன் பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது. ஆதலால் நான் குறுக்கே நிற்ப தில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்குச் சந்தோஷமே.
இப்போது எனக்கும் எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சினை. இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல. பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப் போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கியப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் தான் தாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம் இருந்து வருகின்றது.
அதைத்தான் நாங்கள் அவசியமாய் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பியிருக் கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும். பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத் துக்குத்தான் பயன் உண்டாகலாம்.
நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில் தான், இந்த தேசப் பொது மக்களின் தலையெழுத்து நிர்ண யிக்கப்படப் போகின்றது.
ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934

பார்ப்பன பத்திரிகைகளும் சர். சண்முகமும்

தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பாக்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக்கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும் கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள். இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.
தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.
இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத்தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.
ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முட்டாள் தனத்தையும், சுய மரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.
விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதரவளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம். என்பதோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லாதாரைக் கண்டு இரங்குகின்றோம்.
பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனிதனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934

- http://www.viduthalai.periyar.org.in/20101120/news21.html

ஞானசூரியன்

ஞானசூரியன்
(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
முன்னுரை
இந்த ஞானசூரியன் தன் பெயருக்கேற்ப, இந்து மதம் என்பதன் பெயரால் நடைபெற்று வரும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம், ஸ்மிருதி, உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் புரட்டுகளையும், ஆதாரத்தோடு விளக்கிக் காட்டித் தமிழ் மக்களிடம் அறிவுப் பயிரைச் செழித்து வளரச் செய்யும் சிறந்ததொரு நூலாகும்.
இதனை ஒரு முறை படிப்பவர்கள் ஜாதி, மதம், வருணாச்சிரம தருமம், யாகம், பூஜை திருவிழா முதலியவைகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்தி வைத்தவை என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்து, அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாற்றும் தன்மை ஒழிந்து, பகுத்தறிவும், சுயமரியாதையும் உடைய வர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.
இந்நூலைத் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ், வட மொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர். இதனை எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட்செலவில அச்சிட்டு வெளி யிட்டவர், பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழரு மாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு.சண்முகம் அவர்களாவார்.
இவ்விருவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து, ஆரியச் சூழ்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடனேயே மிகவும் குறைந்த விலையில் வெளியிடுகிறோம். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் வாங்கிப்படித்து உண்மை உணர்வார்களாக.
சிறப்புரைகள்
திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது

ஞானசூரியன் கூறும் பொருள் களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என ஆண் பாலாற் கூறுதல் தகுதி யேயாம்.
அவன் வடமொழி வேதங் களிலும், மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம் முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும், சாதிக் கோட்பாடுகளையும், கொடுமை களையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலிய வற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப் பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார். பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.
பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமண ரல்லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர் களையும், பூசாரிகளையும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.
இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்கு கின்றான்.
வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ஞான சூரியன் கிரணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.
சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
கோயிற்பட்டி, வ.உ.சிதம்பரம்பிள்ளை 7.10.1927
எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட

திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்கள் எழுதியதன் சுருக்கம்.
தமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள் வதற்கு இந்நூல் பெரியார் ஒளி காட்டியாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்ம னோர்கள் விடுதலை அடை வதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ் கின்றேன்.
சென்னை, கா.சுப்பிரமணியபிள்ளை
24.10.1927.
மறைமலை அடிகளார் கருத்து
ஞான சாகரம் பத்திராதிபர்
சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன் சாரம்:
-

வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப் பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக் கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக் குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை ஓட்டி, வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்கு வதற்குப் பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந் திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும் தமிழுரை களும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப் பொருள் வாய்ந்தது.
பல்லாவரம் சுவாமி வேதாசலம்
7.10.1927
ஆரியர் சித்தாந்தம்
அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர் களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.
(13-10-1935 குடி அரசு பக்கம் 9)
இந்து மதம் ஒழிகிறது
இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம் சீர்திருத்த மடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.
(17-10-1935 குடி அரசு பக்கம் 11)
பெண்களும் - கற்பும்
பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.
(3-11-1935 குடி அரசு பக்கம் 13)
சூத்திரர்கள் யார்?
தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.
(19-9-1937 குடி அரசு பக்கம் 9)

- http://www.viduthalai.periyar.org.in/20101120/news10.html

வியாழன், 18 நவம்பர், 2010

கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி!

கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி!

சீரங்கத்தில் பார்ப்பனரைப் பல்லக்கில் சுமப்பது நிறுத்தப்பட்டது
கோயில் பின்புறமாகப் பார்ப்பனர்கள் ஓட்டம்!

திருச்சி, நவ.18- திருவரங் கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த பல ஆண்டு களாக பார்ப்பனர் களைப் பல்லக்கில் சுமந்து செல்லும் கொடுமை வழக்கம் இருந்து வருகிறது. இந்த வழக்கம் கூடாது என்றும் இதனைக் கண்டித்து முதன் முதலில் விடுதலை யில் செய்தி வெளியிட்டி ருந்தோம். மேற்கண்ட வழக்கத்திற்கு எதிராக கோவில் இணை ஆணை யரும் நடவடிக்கை எடுத் ததால் ஆத்திரம் கொண்ட பார்ப்பனர் கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் திருவரங்கத் தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவரங்கம் ரங்கநா தர் கோவிலில் தற் போது கைசிக ஏகாதசி புரா ணங்கள் பாடும் நிகழ்ச் சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சி நிறைவு நாளன்றுதான் பார்ப்பனர்களுக்கு பிரம்ம ரத மரியாதை யுடன் பல்வேறு பொருள் கள் அளிக்கப்பட்டு, யானை கள் முன்னே செல்ல, வீடு வரை அவர்களை (பிரம்ம ரதம்) பல்லக்கில் சுமந்து சென்று விட்டுவருவது வழக்கமாம். பல்லக்கு சுமந்து செல் லும் சீமான் தாங்கிகள் ஏற்கெனவே இனி பல் லக்கு தூக்கமாட்டோம் என்று கூறி வந்ததால், பெரும் சர்ச்சைகள் இருந்து வந்தன. இதற் கிடையில் பார்ப்பனர் களை பல்லக்கில் தூக்கி சுமந்து செல்லும் முறை மனித உரிமைக்கு எதி ரான போக்கு என்று திருவரங்கத்தில் நடை பெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலை தொடர்ந்தால், திரா விடர் கழகம் விரைவில் போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்ப்பனர் கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தங் களுக்கு சாதகமாக வரு மென்று நினைத்திருந்த பார்ப்பனர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டது. ஏற்கெனவே இந்த முறையை ரத்து செய்வ தென அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் இணை ஆணையர் தெரிவித்த தால் , எப்படி பல்லக்கில் செல்வது, நம்மை யார் பல்லக்கில் தூக்குவார்கள் என்று பல்வேறு முயற்சி களை மேற்கொண்டனர் பார்ப்பனர்கள். மேலும் மேலும் எதிர்ப்புகள் வந்ததால், அதனையும் மீறி பார்ப்ப னர்கள் நேற்று (நவ.17) பல்லக்கில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். இதற்கு மீண்டும் சர்ச்சை கள் வரவே, காவல் துறையினர் சம்பந்தப் பட்ட பார்ப்பனர்களை அழைத்து எச்சரித்தனர். இந்நிலையில்இன்று அதிகாலை கைசிக ஏகாதசி புராணங்கள் பாடிவிட்டு, வேதவி யாசர் பராசரபட்டர் உள் ளிட்ட பார்ப்பனர்கள் பிரம்மரத மரியாதையைக் கைவிட்டு விட்டு, வழக் கமாக செல்லும் கோவில் முன்புற வழியில் செல் லாமல் பின்புறமாக நடந்தே வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். இத்தகவ லறிந்து பொது மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந் தனர். பல்லக்கில் சுமந்து செல்லும் சீமான் தாங்கிகள் பெருமகிழ்ச்சியடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விடுதலைச் செய்தி எதிரொலியாலும், திராவிடர் கழகப் போராட்ட அறிவிப்பாலும் தான் இந்த முறையை பார்ப்பனர்கள் கைவிட்டனர் என்று தெரிவித்தனர்.

- http://www.viduthalai.periyar.org.in/20101118/news02.html

புதன், 17 நவம்பர், 2010

புதிய மனுநீதியோ!

உளறல்கள்...
சுராபானம் என்கிற போதைச் சரக்கை நிறையக் குடித்துவிட்டு, அந்தக் குடி போதையிலே ஏதேதோ உளறினார்கள். அப்படிப்பட்ட அந்தப் போதை உளறல்கள்தான் இன்றைய தினம் வேதங்கள் என்று சொல்லப்படுபவைகள்.
விடுதலை, 22.3.1954


புதிய மனுநீதியோ!

அகில இந்திய அளவில் உள்ள பார்ப்பன ஊடகங் கள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி பேட்டியில் (15.11.2010) தெளிவாகக் கூறினார்.
தி.மு.க. அரசின் சமுதாய சீர்திருத்தக் கொள்கை கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பாதையில் செல்லுவதைப் பொறுக்கமாட்டாத பார்ப்பன சக்திகள், ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் மத்திய அமைச்சர் ஆ.இராசாமீது பாணம் தொடுத்துள்ளன.
2 ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் இராசா அவர்கள் புதிதாக எந்த ஒரு கொள்கையையும் வகுத்துச் செயல்படுத்திடவில்லை. ஏற்கெனவேயிருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடித்திருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எதிரிக்கட்சியாகி விட்டவர்கள் சற்றும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இதற்கு முன்பு பிரமோத் மகாஜன், அருண்ஷோரி காலத்தில் ஏற்பட்ட நட்டம் பற்றியும் இந்தியத் தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறியுள்ளதே-அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கும் நாணயமான பதில் - இராசாவை பதவி நீக்கம் செய்யத் துடித்தோரிடமிருந்து வரவில்லையே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, இராசா பதவி விலகியே தீரவேண்டும். ஆடிட்டர் ஜென ரலே கூறிவிட்டார் என்று பூமிக்கும், வானத்திற்கும் தாவிக் குதிக்கிறார்களே-
இவர்களின் கேரள மாநிலக் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன்மீது சாற்றப்பட்ட குற்றமென்ன?
1981இல் ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது கனடா நாட்டின் லாவ்லின் நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஒன்று போட்டார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சம்தான்- ஆமாம் ரூ.376 கோடி.
இதனை வெளிப்படுத்தியதும் கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்தான்.
அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி நடந்து கொண்டது? சி.பி.அய் விசாரிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே (16.1.2007) சி.பி.அய்யும் விசாரணை செய்து ஊழலை உறுதி செய்ததே (21.1.2009)
அப்பொழுது சி.பி.எம். என்ன சொன்னது? அரசியல் தூண்டுதல் காரணமாக உள்நோக்கத்துடன் சி.பி.அய் இப்படிக் குற்றம் சாற்றியுள்ளது என்று கூறவில்லையா?
ம.தி.மு.க.வும் சேர்ந்துகொண்டு அமைச்சர் இராசா பதவி விலக வேண்டும் என்று கூறுகிறதே.
அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர் கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரணமான வையா? ஊழலைவிடக் கொடுமையானதாயிற்றே- மதச்சார்பற்ற தன்மைக்கே மரண குழி வெட்டியவர்கள் ஆயிற்றே.
இத்தகைய குற்றச்சாற்றுக்கு ஆளானவர்கள் அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா என்று நாடாளுமன் றத்தில் கடும் எதிர்ப்புப் புயல் வெடித்தது. அப்பொழுது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்படி நடந்துகொண்டார்?
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று புரட்சிப்புயலாக வெடித் தெழுந்தாரா?
அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை அவர் வாயாலேயே கேட்போம். திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் (20.2.2001) இதோ வைகோ பேசுகிறார்: பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட-அத்வானி பதவி விலக வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் ஒன்பது நாள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நான் டில்லியில் வீட்டி லிருந்தேன். காலை 9 மணிக்கு வாஜ்பேயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 10 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று பிரதமர் அழைத்தார். எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு அரசின் சார்பில் அருண் ஜேட்லி பதிலளிப்பார். அதற்கடுத்து நீங்கள் பதிலளித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிராளிகளின் வியூகத்தை எளிதில் உடைக்கக் கூடியவன் இந்த வைகோ என்ற நம்பிக்கையில் என்னிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்று பேசினாரே!
அமைச்சர் இராசா ஊழல் செய்தார் என்று குறிப் பிடப்படவில்லை - அவர் செயலால் அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளவர் பதவி விலக வேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மட்டும் பதவி விலகக் கூடாது-இதுதான் வைகோ அவர்களின் புதிய மனுதர்மம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று வந்துவிட்டால் ஆதிக்கவாதிகளுடன் கைகோத்துக் கொள்வது சரியானதுதானா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!

- http://www.viduthalai.periyar.org.in/20101116/news03.html

திங்கள், 8 நவம்பர், 2010

நாயாக...

இன்றைக்குத் திருவரங் கத்திலே திராவிடர் கழகத் தின் சார்பில் திராவிடர் எழுச்சி மாநாடு. திருவரங் கம் என்று சொன்னாலே வைணவர்களின் முக்கிய தலமாகக் கூறப்படுவ துண்டு.
இந்த ஊர் கோயிலுக்கு எத்தனை எத்தனையோ தல புராணங்கள் உண்டு. ஏகாதசி விழா இந்தக் கோயிலில் பிரசித்தம் - வைகுந்தம் செல்வதற்குச் சொர்க்க வாசலைத் திறப் பதுண்டு. ஆனால், எந்தப் பக்தரும் சொர்க்கத்திற்குச் சென்றதாகத் தகவல் இல்லை. கோயிலுக்குச் சென்றவர்கள் திரும்பி அவரவர் வீடுகளுக்குத் தான் திரும்பி வருகிறார்கள்.
சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்ட பின் உள்ளே சென்றவர்கள் திரும்ப முடி யாது என்ற நிலையிருந் தால் எந்த ஒரு பக்தனும் அந்தக் கோயில் பக்கம் தலை வைத்துப் படுக்கவே மாட்டான் என்பது யதார்த் தம்.
சின்ன வயதிலே மண் சோறு பொங்கி, மரப்பாச்சி வைத்து விளையாடும் பழக் கம் - பெரியவர்கள் ஆனா லும் அவர்களை விட்டுப் போவதில்லை. அதற்கு அடையாளம் பெரிய பெரிய பொம்மைகளை வைத்து விளையாடுகிறார்கள் - பெரியவர்களாக ஆனவர் கள். சின்ன சின்ன பொம் மைகளை வைத்து விளை யாட முடியாது அல்லவா!
இவ்வளவு சக்தியை அந்த ரெங்கநாதன்மீது ஏற்றி வைக்கிறார்களே - அந்த ரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் இந்தக் கோயில் ஒரு 50 ஆண்டு களுக்குமுன் தீப்பிடித்து எரிந்து, ரெங்கநாதன் உரு வமே வெடித்துச் சிதறி அதற்குப் பின் புதிய பொம்மை (சிலை) அடித்து வைக்கப்பட்டது. அப்பொழு தாவது கடவுளின் சக்தி என்பதெல்லாம் வெத்து வேட்டு என்று தெரிந்து கொண்டிருக்கவேண்டும்.
பக்தி மூளையை அல்லவா கவ்விப் பிடித்து விட்டது. எப்படி சிந்திப்பார் கள் - திருந்துவார்கள்?
ஏகாதசியன்று இரவு இந்த ரங்கநாதனை எப்படி துதிக்கவேண்டுமாம்? அதற்குப் பாட்டு எல்லாம் எழுதி வைத்துள்ளனர்.
தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண் டாம்! ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரி யும் நாயாக பிறக்கும் பாக் கியத்தை எனக்குக் கொடுப் பாயாக!
(தினமலர், 28.12.2009)
என்றெல்லாம் ஏகாதசி இரவு அன்று பக்தர்கள் பாட்டுப் படிக்க வேண்டு மாம்.
பக்தி மனிதனை நாயாக ஆக்குகிறது - பகுத்தறிவு மனிதனாக நிலைக்கச் செய்கிறது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
கடவுளை மற - மனி தனை நினை என்றாரே தந்தை பெரியார் - அதற்கு ஈடு இணையும் உண்டோ!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101108/news02.html

கிரந்த எழுத்து தமிழில் திணிப்பு!

தமிழின் முப்பத்தோரெழுத்து களும் அவ்வாறே யின்றளவு மிருக் கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்.. . . . தமிழுஞ் சம்ஸ் கிருதமுங் கலந்த மொழி கேள்விக் கின்பம் பயக்குமென்ற போலி யெண்ணமே இத்தகைய ஆபாச மொழி யொன்று வகுக்குமாறு தூண்டிற்று. என்று பரிதிமாற் கலைஞர் எழுதுவார். பாரதி பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்கு குறியீடுகள் உருவாக்க வேண்டும் என்று 1916 இல் ஞான பானு இதழில் தமிழில் எழுத்துக் குறை என்ற தலைப்பில் எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும், அன்போடு உறவுமுறையில் மாமா என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக் கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார். ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தைப் புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற் றொலிகள் வராமல் காக்க வேண்டும். வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம்) கட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன. அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழிலிருந்து சிதைவால் தோன்றின. இனியும் தமிழைச் சிதைக்க விட வேண்டா. கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று திரு நாக.கணேசன் முயல் கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர் கள் தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங் குறியில் - தமிழின் ஒலிச் சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில் தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 (ஜ,ஷ, ஸ, ஹ, க்ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளி யிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத் தினராலும் கட்டுரையாசிரியர்களா லும் கொண்டுவரப்பட்ட மணிப் பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்துத் தமிழின் தனித்தன் மையைக் கெடுத்து, மேலும் கன்னடம், மலையாளம்போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண் டும் என்னும் எங்களின் கருத்து. உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத் தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்திய தால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற் காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார்,டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருத சொற்களும் புகுந்து, தமிழ் மலை யாளம் மொழி 2என அழைக்கப் படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும், இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழி யியல் குறியீடுகள் போதும். எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேரா சிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக் கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை இன்றி இயங்கும். 2. அய்ந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லை. மொழி இயலார் பயன் படுத்தும் குறியீடுகளை (ஈஆ - ஈன் டெர்னடிஒனல் கொனெடி அல்ப்க பெட்ச்) பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக் காட்ட இயலும். அப்படி இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்? 3. இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங் குறியீடுகள் முதலியன ...தமிழ் எழுத் துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த எழுத்துகள் வலிந்து நுழைக்கப்படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.
4. கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு தமிழ்த் தாய் சீர்குலைப் புக்கு ஏதுவாகும் . இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படி இருப்பினும், கிரந்த எழுத் துகளின் படையெடுப்பை முறிய டிக்க வேண்டிய கடமை தமிழறிஞர் களுக்கு மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு
- முனைவர் பா. இறையரசன்

- http://www.viduthalai.periyar.org.in/20101108/news08.html

மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே

வீதிக்கு வருகிறார்களாம்!

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸின் முக்கிய பிரமுகர்கள் தேவேந்தர், லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, சந்தர் சேகர் லவே, சுனில் ஜோஷி உள் ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியப் பிரமுகரான ஆர்.எஸ்.எஸ். தேசியக் குழுவின் உறுப்பினர் இந்தரேஷ் குமார் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைபேசிகளும், சிம் கார்டுகளும் பல ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளை அடை யாளம் காட்டிவிட்டன.

ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறைப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை யில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போதுமானவை என்றும், ஆர்.எஸ்.எஸின் வன்முறை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதுதான் தாமதம் - தாங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிவிட்டோம் என்பதைத் துல்லிய மாக உணர்ந்து கொண்ட ஆர்..எஸ்.எஸ். கும்பல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.

ஆர்.எஸ்.எஸின் நாக்பூர் தலைவர் ரவி ஜோஷியும், இணைச் செயலாளர் ஒருவரும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.
கடந்த 80 ஆண்டுகாலமாக கட்டுப்பாடான வாழக்கை வாழ்வது எப்படி என மக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். தன்னலமற்ற இந்தச் சேவையை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. தேசிய பேரிடர் வரும்போதெல்லாம், உடனடியாகக் களமிறங்கி, பாதிக்கப்பட்டோருக்குச் சேவை செய்கிறோம். வன்முறைக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் சகட்டு மேனிக்கு எங்களை விமர்சிக்கிறது என்று கூறியுள்ளனர்.

வரும் 10 ஆம் தேதி புதுடில்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தப் போகிறார்களாம்.
நெருப்பு சுடாது, பனிக்கட்டி குளிராக இருக்காது என்று சொன்னால், எப்படி நம்பமாட்டார்களோ அதைப் போன்றதுதான் ஆர்.எஸ்.எசுக்கும், வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும்.
மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் என்பதை விளக்குவார்களா?
ஆண்களுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கிப் பயிற்சிகளையும், வன்முறைப் பயிற்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். கொடுத்து வருகிறதே - இதன் தன்மை என்னவாம்?

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்கள் யார்? கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று தங்கள் மீது விழுந்த கறையைக் கழுவிக் கொள்வதற்காக இவர்கள் மறுக்கலாம்.

நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேயும், அவரது மனைவியும் நாதுராம் கோட்சே கடைசிவரை ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேட்டி கொடுத்துள்ளனரே - மறுக்க முடியுமா?

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி மதக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம் போட்டார்களே - அது அம்பலம் ஆகவில்லையா?

கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்தது என்ன? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, வெடிகுண்டு வெடித்து பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலியானார்களே - அதற்குப் பெயர் என்னவாம்?

2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அதே ஆண்டு மே திங்களில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத், அதே ஆண்டு செப்டம்பரில் மாலேகான் குண்டுவெடிப்பு களில் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டனர் என்ற புரளியைக் கிளப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனரே!

அவையெல்லாம் முழுப் பொய் - இந்த வன் முறைகளின் பின்னணியில் இந்த சங் பரிவார்க் கும்பல்தான் இருந்துள்ளது என்று தக்க ஆதாரத் துடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பேராபத்துத் தலைக்குமேல் வந்தேவிட்டது என்ற அச்சத்தில் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர்.

இந்த அச் சுறுத்தல்களைக் கண்டு மிரண்டு போகாமல் இந்தக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர மத்திய அரசு மேலும் காலம் தாமதம் செய்யாமல் செயல்படவேண்டும். அதன்மூலமே வன்முறை சக்திகளின் ஆணிவேரை வீழ்த்த முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- http://www.viduthalai.periyar.org.in/20101108/news06.html

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு

இன்று கந்தசஷ்டி திரு விழா தொடங்குகிறதாம். சிவ பெருமான் நெற்றிக்கண் ணின் தீப்பொறியில் இருந்து தோன்றியவன் முருகபெரு மான் (ஸ்கந்தனாகிய இவன் சிவபெருமானின் இந்திரிய வெள்ளத்திலிருந்து தோன்றி யவன் என்பது இன்னொரு கதை!)

அவன் சூரபத்மனோடு போரிட்டு வதம் செய்த நாள் தான் இந்தக் கந்த சஷ்டியாம்.

தீபாவளி என்று சொல்லி நரகாசுரனை வதைத்து நேற்று தீபாவளி கொண்டாடி யாயிற்று. இன்றோ சூரபத் மன் என்ற அசுரனைக் கொன்று கந்தசஷ்டி விழா - ஆறு நாள்கள் முருகன் கோயில்களில் தடபுடலாக விழா நடக்கும். எதையாவது காரணம் சொல்லி, கோயில் சுரண்டல் சாங்கோபாங்க மாக நடந்தாக வேண்டுமே!

கடவுள்களுக்குச் சக்தி யிருந்தால் சண்டை போட் டுத்தான் கொல்லவேண்டுமா என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது - அப்படி கேட்டால், நாஸ்திக வாதம் என்று வாய் நீளம் காட்டு வார்கள். பதில் சொல்ல சரக்கு இல்லாதவர்கள் வேறு எதைத்தான் சொல்லி சமாளிப்பார்கள்?

ஒரு மனிதனுக்கு ஒரு பிறப்புதான் இருக்க முடியும். மாற்றிச் சொன்னால் சந் தேகப்படுவார்கள் - கொச் சையாகப் பேசுவார்கள். ஆனால், முருகன் பிறப்பாக இருந்தாலும் சரி, அவன் சகோதரன் விநாயகன் பிறப் பாக இருந்தாலும் சரி பல பல தகவல்கள் - ஆபாசச் சாக் கடைக் குட்டைகள்!

கடவுள் சமாச்சாரம் ஆயிற்றே - யார் கேள்வி கேட்கப் போகிறார்கள். பக்தி என்று சொன்னால், மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய வற்றைப் பஞ்ச கவ்யம் என்று சொல்லி தட்சணை கொடுத் துக் குடிப்பவர்களிடத்தில் அறிவையும், மானத்தையும் தான் எதிர்பார்க்க முடியுமா? பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?
இந்தக் கந்த சஷ்டியைப் பற்றி ஆன்மீகக் கர்த்தாக் கள் ஒரு வியாக்கியானம் சொல்லுவார்கள்.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியே தவறு. சஷ்டியில் இருந்தால் அகப் பையில் வரும் என்பதுதான் உண்மையான பழமொழி.

சஷ்டியில் முருகப்பெரு மானை வேண்டி, திருமணம் ஆன பெண்கள் விரதம் இருந்தால், அவர்களது கருப் பையாகிய அகப்பையில் குழந்தை வரும் என்பதுதான் இதன் உண்மையான பொருள் என்று கூறுகிறார் கள். அது சரி, அந்த சஷ்டி கதாநாயகனான முருகப் பெருமானுக்கு வள்ளி, தெய் வானை என்று இரண்டு பெண்டாட்டிகள் இருந்தும், குழந்தை இல்லையே - அவரா மற்றவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கொடுப் பார்?

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு என்கிற பிச்சைக்காரனுக்கும், இவர் களுக்கும்தான் என்ன வித்தியாசம்?
- மயிலாடன்.

- http://viduthalai.periyar.org.in/20101106/news01.html

தமிழர் தலைவர் கோரிக்கைக்குக் கைமேல் பலன்

ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் சமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் கோரிக்கை

சென்னை, நவ.7- ஒருங்குறியீட்டுக் கூட் டமைப்பில் (யூனிகோர்டு கன்சார்ட்டியம்) சமஸ் கிருதம் மற்றும் கிரந்த எழுத்துக்களை இடம் பெறச் செய்வது தொடர் பான முடிவை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு முதல் அமைச் சர் கலைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இதுகுறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து விடுதலையில் (28.10.2010) அறிக்கை வெளியிட்டுயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் கலை ஞர் அவர்கள் எழுதி யுள்ள கடிதம் வருமாறு:
நமது பாரம்பரிய அறிவு பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர், இண்டர் நெட் மற்றும் மின்ஊட கங்களில் இடம்பெறும் வகையில் வேதகால, சமஸ்கிருத மற்றும் கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ போன்ற எழுத் துக்கள்) ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் (யூனி கோடு கன்சார்ட்டியம்) சேர்ப்பது தொடர்பாக அந்தக் கூட்டமைப்புக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ள விவரம் தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய திட்டம், உலகம் முழுவதும் உள்ள தமிழர் கள் மத்தியில் கேள் வியை எழுப்பி உள்ளது. இந்த திட்டத்தை குறிப் பாக, கிரந்த எழுத்துருக் களுடன் 5 தமிழ் எழுத் துக்களை சேர்ப்பது தொடர்பாக, ஒருங்குறி யீட்டு கூட்டமைப்பிடம் சமர்ப்பிப்பதற்கு முன் பாக தமிழறிஞர்கள், மற்றும் மொழியியல் அறிஞர்களிடம் தேவை யான அளவு ஆலோ சனை செய்யப்படவில்லை என்று பெரும்பாலா னோர் கருத்து தெரிவித் தனர். இதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி அமைச்சர்கள், தமிழறி ஞர்கள், மொழியியல் அறிஞர்கள், தொழில் நுட்ப நிபுணர்களை வர வழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.
அந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பேரா சிரியர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பொன்முடி மற்றும் மூத்த அமைச் சர்களும், தமிழறிஞர் களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தை சாமி, கான்பூர் அய்.அய்.டி. தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவி ஞர் கனிமொழி எம்.பி., எழுத்தாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், சிங்கப் பூர் தகவல் தொழில் நுட்ப நிபுணர் அரவிந் தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடமொழி எழுத்துக் களை ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் இடம் பெறச்செய்யும் திட் டத்தை முடிவு செய்வ தற்கு முன்பாக தமிழ றிஞர்களுடன் விரிவான ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ றிஞர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு நியமிக்கப் பட்டு, ஆலோசனை நடத்தி, அந்தத் திட்டம் தொடர்பாக பரிந்துரை கள் பெறப்படும்.
மத்திய அரசு ஏற்கெ னவே இந்தத் திட்டம் தொடர்பான கருத்து ருவை ஒருங்குறியீட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டதால், அதுதொடர்பாக உட னடியாக முடிவு செய்து விடாமல், தமிழறிஞர் கள், மொழியியல் அறி ஞர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி, பெறப்படும் கருத்துகள் வரும்வரை சற்று காத் திருக்குமாறு அந்த கூட் டமைப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா அறிவுரை வழங்க வேண் டும்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

- http://www.viduthalai.periyar.org.in/20101107/news02.html