பெரியாரிடம் உன்னை ஒப்படை!
- தமிழர் தலைவர் கி.வீரமணி -
பெண்ணே, உன் விலங்கை நீ தான் உடைத்தாக வேண்டும்
உன் சுதந்திரத்திற்காக நீ தான் போராட வேண்டும்
உன் சமத்துவத்திற்காக நீ தான் அணிவகுக்க வேண்டும்!
உன் பிள்ளையை வேறு யாரோ பெறுவரோ?
துடை உன் வற்றாத கண்ணீரை
உடை உன் வலிமையான விலங்கை
கடைச் சரக்கானது போதும் - இனி
படைத் தலைமை ஏற்கப் புறப்படு!
புரட்சி செய்யப் புலியெனக் கிளம்பு!
பலி ஆடாய் இருந்த நீ புலியாக
மாறினால் பலி கொடுக்க நெருங்கார் எவரும்!
என்று சொன்ன பெரியார் படைக்குத்
தலைமை தாங்கிடவா, ஓடிவா! தாமதிக்காதே!
புதிய நூற்றாண்டு ஓடி வந்தது; புதுத்தெம்போடு ஓடி வா!
பெரியாரைத் தேடி வா. பெண்ணே! என் கண்ணே!
பெண்ணே, விதவைக் கோலத்தை இளமைக்காலத்திலே
வேண்டாது பெற்றுவிட்ட என் ஆரூயிர்த்தங்கையே
நீ ஆணாய்ப் பிறந்திருந்தால் உனக்கு உண்டா
இந்த விதவைக் கோலம் - அலங்கோலம்?
உன்னை சுதந்திர வாழ்வு வாழவைக்க சமூகத்தடை
உனக்கு சமத்துவ வாழ்வுதர சாஸ்திரத் தடை
இவற்றை உடை என்று முழங்கிய பெரியாரிடம் உன்னை ஒப்படை!
அதுவே உன் வாழ்க்கைக் கணக்குக்குச் சரியான விடை!
(உலக மகளிர் நாள் 2000)