வியாழன், 28 அக்டோபர், 2010

பிரச்சாரம்

மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
- விடுதலை, 5.1.1972

இங்கிலீசுக்குக் கோயிலாம்!

கோயில்கள் ஏன் தோன்றின? எதற்குத் தோன்றின? அதன் பின்னணி என்ன? என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.
உத்தரப்பிரதேசத்திலே இங்கிலீசுக்குக் கோயில் தோன்றியுள்ளதே - திருச்சியில் நடிகை குஷ்புக்குக் கோயில் கட்டப்பட்டதே, ஈரோட்டில் காந்திக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளதே - இவற்றின்மூலம் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுவிடலாம்.
கடவுளுக்கும் சக்தி, ஒவ்வொரு கோயிலக்கும் எழுதி வைக்கப்பட்டுள்ள தல புராணங்கள் எல்லாம் நெய்யில் பொரித்த பச்சைப் பொய் - கலப்படமற்ற பொய் என்பது அறிவைப் பயன்படுத்தும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் கோயில்கள் ஏன் தோற்றுவிக் கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டு மானால் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திர நூலைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.
கோயில்கள் அரசன் வருவாய்க்காக ஏற் படுத்தப்படவேண்டும் என்பதுதான் சாணக்கியன் சொல்லிச் சென்ற தந்திரம்.
ஓர் இரவு ஒரு தெய்வத்தையோ, படத்தையோ ஏற்படுத்தவேண்டியது; அல்லது ஒரு கெட்ட சகுனத்தைப் போக்கிட (தீயவை நடக்காவண்ணம் தடுக்கும் பொருட்டு) திருவிழாக்களும், கூட்டங் களும் நடத்துவதாகப் பாசாங்கு செய்து பொது மக்களிடமிருந்து அரசனது செலவுக்குப் பணம் வசூலிக்கலாம்.
(சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் தோன்றியதாகப் புரளி செய்து, உண்டியல் வசூல் செய்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் கடுமையான எச்சரிக் கைக்குப் பிறகு - உண்டியலும், திடீர்ப் பிள்ளை யாரும் பறிமுதல் செய்யப்பட்டதே - அதனை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்க! - இந்தப் பித்தலாட்டங்களுக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆமாம் போட்டார் என்பதையும் கவனத்தில் கொள்க!).
சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் பலன் அளிக்கின்றன. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து, பணம் திரட்டும் வழி முன்காலத்தில் மற்ற நாட்டுப் புரோகிதர்களால் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்னும் அவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்ரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டுப் பரவசமடைகிறார்கள். ஆனால், கர்ப்பக் கிரகத்தின் உள்ளோ, பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகிறான் என்பதை இவர்கள் அறிவதில்லை என்கிறார் ஆபேடூபே.
இத்தகைய கோயில்களில் பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் தேடிக் கொண்டுவிட்டனர்.
கோயில் என்றால், அதற்குள் அடித்து வைக்கப் பட்ட விக்ரகங்கள் என்றால் பொது மக்களிடம் பக்தியும், பயமும், மரியாதையும் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட சூழ்நிலையில், யாரையாவது பெருமைப்படுத்தவேண்டுமானால், அவர்களுக்குக் கோயில் கட்டுவது என்பது ஒரு வழமையாகி விட்டது.
ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திட ஆங்கிலத் தேவி எனும் பெயரால், உத்தரப்பிரதேசம் கிரி மாவட்டத்தில் கோயில் எழுப்பப்பட்டு வருகிறதாம்.
மற்ற மற்ற கோயில்களில் எந்த முறையில் வழிபாடு நடத்தப்படுகிறதோ அந்த முறையில் இந்த ஆங்கிலத்தேவி கோயிலிலும் வழிபாடு நடத்தப் படுமாம்.
இன்னும் கொஞ்ச நாள்களில் இந்தத் தேவி பற்றி தல புராணங்கள் எழுதப்பட்டுவிடும். தேவி கனவில் வந்து சிலவற்றைக் கூறினாள் என்று அற்புதங்கள் அடங்கிய கதைகளைக் கட்டி விடுவார்கள்.
ஆண்டுதோறும் தேர்த்திருவிழா என்ற வைபவங்கள் வந்து சேரும்.
தொடர்ந்து இது கிறித்துவக் கோயிலா, இந்துக் கோயிலா என்ற ரகளையும் ஏற்படும்.
கோயில்கள் தோன்றியதற்குப் பின்னணியில் அற்புதமோ, அசைக்க முடியாத சக்தியோ எந்தப் புண்ணாக்கும் கிடையாது; எல்லாம் பொய்யும், புனை சுருட்டும், பிழைப்பதற்கு வழியும், பித்த லாட்டமும்தான் என்பதைக் கண்ணெதிரே நடை பெறும் இந்தப் புழுதிக் கூத்துக்களின் மூலமாக வாவது தெரிந்துகொள்வார்களாக!

- http://www.viduthalai.periyar.org.in/20101028/news04.html