வியாழன், 4 நவம்பர், 2010

தீவாளியா? - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தீவாளியா?

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
_ இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட் பவனை, ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும் நாள்,
மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்,
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீ என்று விடுவிரே!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews23.html