வியாழன், 5 ஆகஸ்ட், 2010
செவ்வாய், 27 ஜூலை, 2010
விடுதலை
பூனைக் குட்டி வெளியில் வந்தது!
நேற்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது.
பெரியார்தம் சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை; அப்படி எழுதி வைக்கப்படாத நிலையில், அந்தச் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை!
அப்படி அரசு எடுத்துக் கொள்ளவில்லையென்றால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவோம் என்று கழகத்தால் விலக்கப்பட்ட ஒருவர் பேட்டியளித்ததாக அந்தத் தனியார்த் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இதன்மூலம் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது; அவர்களின் ஆற்றாமையும் அப்பட்டமாகவும் தெரிந்து விட்டது.
திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளை சரியாகப் பரப்பவில்லை; பெரியார் நூல்களை வெளியிடவில்லை; நாங்கள்தான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னவர்களால் பெரியார் சொத்துக்களை நாங்கள்தான் கைபற்றுவோம். மிகமிக வேகமாகப் பெரியார் கொள்கைகளைப் பரப்புவோம் என்று கூறும் திராணி நாணயம் தங்களிடத்தில் அறவே இல்லை என்பதை இதன்மூலம் ஒப்புக்கொண்டு விட்டார்களா இல்லையா?
அக்மார்க் முத்திரைத் துரோகம்!
பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இதற்கு முன்புகூட சில துரோகிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஊளையிட்டதுண்டு. வழக்கு மன்றம் சென்று மூக்கறுபட்டதும் உண்டு. மக்கள் குரல் டி.ஆர்.ஆர். அய்யங்கார் போன்றவர்கள் துப்பிய அந்த எச்சிலைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் சீடர்கள் இப்பொழுது சிலம்பம் ஆட முன்வந்து தங்களது அக்மார்க் முத்திரைத் துரோகத்தை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர்.
இதுவும் ஒரு வகையில் நன்மைதான். பெரியார் கொள்கையை எங்களால்தான் பரப்ப முடியும் என்று மார்தட்டியவர்கள் இப்பொழுது பெரியார் சொத்துக் களை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதன்மூலம் இவர்களின் நோக்கம் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதல்ல பெரியார் கொள்கை களைப் பரப்பும் உண்மையான அமைப்பைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பதுதான் என்பதைப் பொது நிலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதே!
காஞ்சிமடமும் கைலாகு கொடுக்கும்
உச்சநீதிமன்றம் வரை செல்லுவார்களாம். அந்த அளவுக்குப் பொருளாதாரப் பின்னணி அவர்களுக்கு இருக்கிறது இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் காஞ்சிமடம் வரை கைலாகு கொடுக்கமாட்டார்களா?
பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டாதா? அந்த விளம்பரத்தால் ஒருவருக்கொருவர் சந்தித்து கைகொடுத்துக் கொண்டு அற்ப சந்தோசம் அடைய லாம் அல்லவா!
தந்தை பெரியார் அவர்கள் கழகத்திற்கு வாரிசு ஏற்பாடு என்று செய்ததையும், அன்னை மணியம்மையார் அவர்கள் தமக்குப் பிறகு பெரியார் அறக்கட்டளையின் ஆயுள் செயலாளர் யார் என்பதையும் திட்டவட்டமாக சட்ட ரீதியாக எழுதி வைத்துத்தான் ஏற்பாடு செய்துதான் சென்றிருக்கிறார்கள். சொத்துக்களைச் சரியாகப் பதிவு செய்துதான் சென்றுள்ளனர்.
இதுபோல புல்லுருவிகள் தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சுபவர்கள் வரக்கூடும் என்ற தொலைநோக்கோடு தான் அந்த ஏற்பாடுகளை அவர்கள் துல்லியமாகச் செய்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் போலும்!
தீட்டிய மரத்தில் கூர்பாய்ச்சுவதா?
எந்த இயக்கத்தால், எந்தத் தலைவரால் ஆளாக்கப் பட்டார்களோ, விளம்பரப்படுத்தப்பட்டார்களோ, அந்தத் தலைவர் மீதே கட்டாரியை வீசும்போது குறைந்தபட்சம் கறுப்புச் சட்டையைக் கழற்றிவிட வேண்டும்.
இதே பெரியார் அறக்கட்டளைக்காக ஒரு கால கட்டத்திலே வாதாடியதைக்கூட மறந்துவிட்டு, அதற்கு முரணாக முண்டா தட்டுவது என்றால், கூலிக்காக மாரடிப்பது என்கிற ரகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்றுதானே கருதப்படவேண்டும்.
பெரியார் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவேண்டும் அதன்மூலம் தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நாளேட்டை நிறுத்தவேண்டும்; பகுத்தறிவு இதழான உண்மையை ஊத்தி மூடவேண்டும்.
கழக வெளியீடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதன்மூலம் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் ஆழ்வார் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துடியாய்த் துடிப்பதை தமிழர்கள் பார்ப்பனர் அல்லாத கோடானு கோடி மக்கள் சமூகநீதி தேவைப்படும் கோடானு கோடி அண்டை மாநில மக்கள்கூடப் புரிந்துகொள்ளமாட்டார்களா?
எத்தனையோ வழக்குகளைச் சந்தித்தவர்தான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே புதிய சட்டம் ஒன்றை 31சியின் இணைப்பதற்குக் காரணமாக இருந்தவர்.
முதல் திருத்தம் தந்தை பெரியார் அவர்களால் நிகழ்ந்தது என்றால் 76 ஆவது சட்டத் திருத்தம் 31பியின் கீழ் அவரின் நம்பிக்கைக்குரிய சீடர் வீரமணி அவர்களால் ஏற்பட்டது என்பதை வரலாறு கூறிக்கொண்டே இருக்கும்.
ஆணவத்தின் சேட்டை!
ஏதோ ஒன்றில் தற்காலிக வெற்றி பெற்றுவிட்டதால், வானத்தின் கூரையே தங்கள் கைவசம் வந்துவிட்டதாக அதிகம் ஆடுவது ஆணவத்தின் சேட்டைக் குணமே!
ஒருவகையில் மகிழ்ச்சிதான். இவ்வளவு சீக்கிரம் தங்களை அங்க மச்சத்தோடு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்களே என்கிற வகையில் நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்!
---------------------------------------
விநாசகாலே...
பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டு விடுதலையை நாள்தோறும் அரசு வெளியிடும்.
கடவுள் இல்லை, இல்லவேயில்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று அரசு பிரச்சாரம் செய்யும் நம்புங்கள்.
ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று அரசாங்கம் எழுதும் என்று நம்பித் தொலையுங்கள்!
பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று அட்சரம் பிறழாமல் அப்படியே அப்பட்டமாக தலையங்கம் தீட்டும் இதனையும் அதிகமாகவே நம்புங்கள்! நம்புங்கள்!!
தமிழர்களே, உங்கள் சூத்திரப்பட்டம் ஒழிய, கோயிலுக்குப் போகாதீர்கள்; நெற்றிக் குறிகளை இடாதீர்கள்! மதப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்! பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்! என்று கண்டிப்பாக கால் புள்ளிகளை மாற்றாமல் அரசு கட்டுரை தீட்டும் என்று கண்டிப்பாக நீங்கள் நம்பியே ஆகவேண்டும்.
அட பைத்தியங்களே, எங்கே தொடங்கி, எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
விநாசகாலே விபரீத புத்தி!
---------------------------------------
தங்களுக்குக் கிடைக்காதது நாசமாகப் போக வேண்டும் என்று கருதுகிற பார்ப்பன மனப்பான்மை பார்ப்பனர் அல்லாதாரிடம்கூட தொற்றுநோயாக ஒட்டிக்கொண்டு விட்டதையும் இத்தகைய அனுபவங்கள்மூலம் அறிய முடிகிறது.
தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையார் அவர்களையும் மறைமுகமாகத் தாக்க ஆரம்பித்துள்ளவர்கள், அவர்கள் ஏற்பாட்டைக் கொச்சைப்படுத்தக் கிளம்பிவிட்டார்கள். அடுத்து வெளிப்படையாகவே களம் இறங்கத் தயாராகி விடுவார்கள் என்பதில் அய்யமில்லை.
பெரியார் சொந்த புத்தியில்லாதவராம்
ஏற்கெனவே கோவையில் அவர்கள் வெளியிட்ட நூலில் அதில் தந்தை பெரியார் சொந்தப் புத்தி இல்லாதவர் என்றும், அன்னை மணியம்மையார் பாண்டிமாதேவி என்னும் சூழ்ச்சிக்காரப் பெண்மணி என்றும் குறிப்பிட்டு ஆழம் பார்த்துள்ளவர்கள்தானே!
பெரியார் கொள்கைகளைத்தானே அவர்களும் பரப்புகிறார்கள் என்று மேம்போக்காக அனுதாபம் காட்டிய பொதுவானவர்கள்கூட இப்பொழுது முகம் சுளிக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது காலங்கடந்த நிலையில் அத்தகைய வர்கள் உண்மையை உணரும் நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி! (பலரும் தொலைப்பேசி வழியாக இந்த நிலையைக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க நற்செய்தியாகும்).
பெரியார் சொத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் அதன்மூலம் பெரியார் கொள்கைகள் முடக்கப்படவேண்டும் என்கிற திசையில் வெறிபிடித்துக் கிளம்பி உள்ளவர்கள் தங்களைத் தாங்களே குடலைக் கிழித்துக் கொண்டு அடையாளம் காட்டியதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!
மன்னிக்கமாட்டார்கள் தமிழர்கள்
பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்று கிளம்பி, இப்பொழுது பெரியார் சொத்துக் களையே அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுவர் ஏறிக் குதிப்பவர்கள் மீது, வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது சுயமரியாதைக்காரர்களும், பகுத்தறிவாளர்களும், இனவுணர்வாளர்களும், பொது நிலையில் உள்ள தமிழர்களும் எரிச்சல் கொள்வார்கள், ஏளனமும் செய்வார்கள் ஏன் மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை!
அரசு எடுத்துக்கொண்ட பல அறக்கட்டளைகளின் நிலை கதி என்னவாயிற்று என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியுமே!
கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்.
சென்னை
24.7.2010
நன்றி: விடுதலை நாளிதழ். http://viduthalai.periyar.org.in/20100724/news02.html
தந்தைபெரியார்
என் சொத்துக்கள் பூராவையும் இயக்கத்திற்கே எழுதி வைத்து விட்டேன். இப்போது எனக்கு ஒரு காசு சொத்து கிடையாது.என்னை நம்பியே என் மீது உள்ள பற்றாலோ அன்பாலோ கழகத் தோழர்கள் என்னிடம் நிதி கொடுக்கின்றார்கள். அவற்றையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக செர்த்து வைக்கின்றேன். அப்படிச் சேர்த்த பணத்தை மக்களுக்குப் பயன்படும் படி ஏதாவது செய்ய வேண்டுமே என்று கருதி கல்லூரிக்கும் மருத்துவ மனைக்கும் கொடுத்தேன்.
----------------தந்தைபெரியார் - “விடுதலை” 15-8-1968
நன்றி: தமிழ் ஓவியா.(http://thamizhoviya.blogspot.com/2010/07/2_24.html)
பெரியார்
இராஜாஜி அவர்களும், இரு கவர்னர்களும், இரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும், கேட்டுக் கொண்டும் மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். தவிர, எந்தப்பதவியையும் நான் விரும்பியவன் அல்லன்.இன்னும் இனியும் நண்பர்களால், பெரியோர்களால் புகழுரை பெற்றதைத் தவிர யாராலும் ஒரு நலனும் பெற்றதில்லை; விரும்பியதில்லை.
எனக்குப் பொதுத் தொண்டு வரும்படி என்பது என் சொந்தக் காசில் பிரயாணம் செய்து 1930 இல் கூட்டமொன்றுக்கு 50 ரூபாய் வாங்கி, 1950 இல் 100 ரூபாய் வாங்கி 1960 இல் 150 ரூபாய் வாங்கி, 1970 இல் 200 ரூபாய் வாங்கினதுதான். மற்றும், மாநாடுகள் நடத்தியதில் சுமார் 1,00,000 ரூபாய் மீதமிருக்கும். மற்றபடி, எனக்கு இன்றுள்ள அவ்வளவும், மற்றும் இயக்கத்தின் பேரில் உள்ள சொத்துக்கள், செல்வங்கள் அவ்வளவும் என்னால் என் தகப்பனாரைக் கொண்டு செய்யப்பட்ட டிரஸ்ட் தர்ம சாசனம் ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தே அல்லாமல் பிறர் சொத்து, ஒரு காசளவும் இல்லை.அப்படி இருந்தாலும் நான் அவைகளில் இருந்து பொதுநலத்திற்கு என்று திருச்சியில் காலேஜுக்கு 5 இலட்சமும், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு ஒரு இலட்சமும், ஈரோடு பொது ஆஸ்பத்திரிக்கு - குழந்தைகள் வார்டுக்கு ஒரு இலட்சமும், மற்றும் இந்த 50, 60 வருடகாலமாக 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 10,000 ரூபாய் என்கிற கணக்கில் பொதுநலத்திற்கு (தர்மத்துக்கு) என்று கொடுத்துவந்தது 2,3 இலட்ச ரூபாய்க்கும் குறையாது.இயக்கத்திற்கு நான் வாங்கி இருக்கின்ற சொத்துக்கள் இன்று, 30,00,000 (முப்பது இலட்சம்) ரூபாய்க்கும் குறையாமல் பெறும். எங்கள் டிரஸ்ட் சொத்துக்கள் சுமார் 20,00,000 ரூபாய் 30,00,000 ரூபாய் பெறும்.
இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும், தலைவன் என்கிற முறையில் என் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றன. இதனால் இயக்கத்திற்கு இலாபம் என்னவென்றால் வருமானம் பெருகுகின்றது; சொத்து வளருகின்றது; அவ்வளவு தான். எனக்கென்ன பயன் என்றால் கவலை, தொல்லை அதிகமாக இருப்பதுதான். ரொக்கமும் பல இலட்சம் இருக்கின்றது.சர்க்கார் சட்டத்தால், இன்கம்டாக்ஸ் கொடுமையால் இவற்றில் எவ்வளவு குறைந்தாலும் குறையலாம்.
இனி எனது தொண்டினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் ! மற்றும் எனது தொண்டில் எனக்கு உதவியாய் இருந்தவர்கள் பலர் - அவர்களால் கனவில் கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும் செல்வாக்கையும் அடைந்தார்கள்; அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கூட நான் யாரையும் ஒரு காசு அளவுகூடக் கேட்காமலும், எவரிடத்திலும் நானாகக் கைநீட்டாமலும் இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டு தான் வருகிறேன்.
எந்த நிலையிலும் எனது நிலை ஒரு சிறிது கூடத் தாழாமல் ஏதோ சிறிதாவது வளர்ந்து கொண்டே தான் வருகிறது.நண்பர்களே! இவற்றையயல்லாம் ஏன் சொல்லுகின்றேன்? யாரிடத்திலும் எவ்வித உதவியையும் கேட்பதற்கல்ல. மற்ற எதற்கு? மன்னிப்பு கேட்பதற்கு என்ன மன்னிப்பு என்றால், நான் இனிச் சுற்றுப்பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
சென்னையிலோ, திருச்சியிலோ வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்து கொண்டு துண்டுப் பிரசுரம், வால் போஸ்டர், சிறு சித்திரப் புத்தகம் முதலியவை பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம்; அலையவேண்டாம் என்று கருதுகிறேன்.ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது; செப்டம்பர் பிறந்தால் 94 வயது ஆண்டு பிறக்கின்றது.
யார் தயவையும் விரும்பாமல், யார் விசயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.நான் சென்னைக்கு வந்தால் “உண்மை” மாத இதழையும் சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன். சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப்போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையயல்லாம் திருமதி. மணியம்மையார் முயற்சியில் தான் நடை பெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப்பண்ணை ஒன்றும் நடை பெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டிடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டி இருக்கிறது. நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்கமாட்டார்கள்; அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புக்கள் பாதிக்கப்பட்டு விடும்.இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.எனது உடல்நிலை, மனநிலையைப் பொறுத்துத்தான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன.
தமிழ்ப் படிப்புள்ள புலவர் ஒருவர் எனக்கு உதவிக்கு வேண்டியிருக்கிறது. பேச்சில் இருக்கின்றவைகளை எழுத்தில் புத்தகத்தில் ஏற்படுத்திவிட்டுப் போக வேண்டும் என்று கருதுகின்றேன். ஆகவே, தோழர்களே ! என்னைக் கூப்பிடாதீர்கள் ! கூப்பிட்டால் அது மாநாடாக இருக்க வேண்டும், பணம் ரூ.500 கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கின்றேன். மன்னியுங்கள்!
நாடு பூராவும் நல்ல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். நான் எதையும் குறைவில் விட்டு விட்டுப் போகவில்லை. மக்கள் நல்ல உணர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் காரியத்தில் இறங்க வில்லை. அதற்குத் துண்டுப் பிரசுரம் செய்யலாம் என்று இருக்கின்றேன். மற்றொரு முக்கிய விசயம்; நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது. அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும்.
கோவில் பகிஸ்காரம் சாதித்து விட்டாயா என்ற கேட்பார்கள். அது எனக்கு அவமானம்தான். ஆனாலும், நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை என்றாலும், கலைஞர் தடையை நீக்கும் போது ஆரம்பிப்பேன். ஆனால், சினிமா பகிஷ்காரத்திற்கு யாருக்கும் ஆட்பட மாட்டேன். அது அண்மையில் துவக்கப்படும். இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெளியிட இருக்கிறேன்.
---------------- தந்தை பெரியார் - “விடுதலை” - 19-07-1972
நன்றி:தமிழ் ஓவியா.(http://thamizhoviya.blogspot.com/2010/07/3_25.html)
நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100; விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, போட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
-----------------------தந்தை பெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963 அன்றும், பண்ருட்டியில் 13.02.1963 அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையிலிருந்து ஒரு பகுதி
நன்றி: தமிழ் ஓவியா. (http://thamizhoviya.blogspot.com/2010/07/4.html)
சனி, 24 ஜூலை, 2010
இந்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசு வருவார்கள் என்றா அய்யா சொன்னார்கள்?
1925- ல்தான் சுயமரியாதை இயக்கம் கண்டார் அய்யா. அதேபோல் RSS-அமைப்பும் 1925- ல்தான் தோற்றுவிக்கப்பட்டது. RSS பல கிளைகளாக விரவி பரவி நாட்டில் மதக்கலவரத்தை இன்றளவும் ஏற்படுத்தி குருதியை குடித்து கொண்டிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ராங்க்தல், இந்து முன்னணி, ராம்சேனா, இன்னும் எந்தெந்த பெயரிலோ பார்ப்பன நச்சு நாட்டில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. தந்தை பெரியாரின் பெயரில் இயங்கும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், கொள்கையை பரப்புவதில்தான் போட்டி போட்டு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர, எதிரியின் பக்கம் நீட்டவேண்டிய கூர்முனையை நம் பக்கமே திருப்பலாமா? சிந்திக்க வேண்டும். மதங்களின் பெயரால் மனித ரத்தங்களை குடிக்கும் ஆரியக்கூட்டத்திற்கு இடையே உள்ள ஒற்றுமை உணர்வு மனித நேயம் பேணுகிறோம் என்னும் நம்மவரிடையே இல்லையே? ஆன்மிகம், பக்தியின் பெயரால் கோடிகளைகொட்டி குவிக்கும் ஆசிரமங்களை நோக்கி பாயவேண்டிய எறிகணைகள் திசை மாறி திரும்பலாமா? ஹிந்துத்வா பெயரில் எத்தனை அறக்கட்டளைகள், எத்தனை ஹவாலாக்கள்? அறியாதவர்களா? அந்த பக்கம் கவனம் சென்றிருந்தால் பாராட்டலாம். ஆனால்அய்யாவால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றளவும் அறக்கட்டளையை பாதுகாப்பதுடன், முறையாக நடத்தி வருவதுடன், வளர்த்தும் வரக்கூடிய நிலை அல்லவா உள்ளது? அதையெல்லாம் எண்ணி பார்க்காமல், யார் யாரையோ திருப்தி படுத்திட, நம் கைகளால் நம் கண்களை குத்திக்கொள்வதா? ஏதோ ஒருசில காரணங்களுக்காக தலைமையிடம் மாறுபாடு கொண்டு பிரிந்தால், மீண்டும் சேர மாட்டீர்களா? கொள்கை மாறிவிட்டிருந்தால் சேர முடியாதுதான். அய்யாவுக்கு வாரிசு யார்? என்று அய்யாவைக்கேட்டபோது அய்யாவே சொன்னது மறந்து போனதா? இந்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசு வருவார்கள் என்றா அய்யா சொன்னார்கள்? அய்யாவுடன் கடைசி வரை இருந்தேன் என்று கூறினால் போதுமா? அய்யா சொன்னதுபோல் வாரிசு என்பவர் யாராக இருக்க முடியும்? கொள்கைவழி நடப்பவர்தானே? கொள்கையில் மாறுபவர் தானாக விலகிவிடுவார்கள் என்பதை மறுக்கலாமா? துரோகிகள் என்று பெயர் வாங்குவதோடு , பார்ப்பனர்களுக்கும் இடம் கொடுக்கலாமா? எண்ணி பார்க்கவேண்டும் அருமை மானமிகு தோழர்கள். வேகத்துடன் விவேகமும் வேண்டும் அல்லவா?
